நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்க- ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்க-  ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

டெல்லி ஐகோர்ட் நீதிபதி வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி இரவு 11:35 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் மீட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து 4 ஐகோர்ட் நீதிபதிகள் விசாரித்த அறிக்கை மே 4ம் தேதி தலைமை நீதிபதி கன்னாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணைக் குழு தெரிவித்ததாக தகவல் வெளியானது.இந்த நிலையில், விசாரணை அறிக்கை மீது நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்த விளக்கத்துடன் அறிக்கையையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வர்மாவை பதவி நீக்கம் செய்யும்படி பரிந்துரைத்துள்ளது.

இந்திய வரலாற்றில் மொத்தம் 5 முறை சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பிரிவு 124(4) மற்றும் 124(5) இன் கீழ், சுப்ரீம் கோர்ட் நீதிபதி (மற்றும் ஐகோர்ட் நீதிபதி (பிரிவு 217 ஐப் பார்க்கவும்) ஜனாதிபதியின் உத்தரவின் மூலம் அவரது பதவியிலிருந்து நீக்கப்படலாம். பாராளுமன்றத்தின் உரைக்குப் பிறகு ஜனாதிபதி பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிக்க முடியும். நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு பெரும்பான்மையாலும் ஆதரிக்கப்பட வேண்டும். சிறப்பு பெரும்பான்மை என்பது அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மை மற்றும் அந்த அவையின் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆகும்.

இப்படி பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட முதல் நீதிபதி வி. ராமசாமி  ஆவார்.

தமிழ்நாட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சென்றவர் வி. ராமசாமி . அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த போது மிக அதிகமாக வரம்பை மீறி செலவு செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அதன் அடிப்படையில் மக்களவையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. மத்தியில் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது .காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது. நீதிபதி ராமசாமி அவர்கள் 1994 இல் பணி ஓய்வு அடைந்ததை ஒட்டி ஓய்வு பெற்றார்.

நீதிபதி பி.டி. தினகரன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி டி தினகரன் சுப்ரீம் கோர்ட்கு நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட நிலையில் , அவர் பல ஏக்கர் நிலங்களை அரக்கோணத்திற்கு அருகில் அபகரித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நியமித்தார். அந்தக் குழு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் அவரே ராஜினாமா செய்தார். எனவே பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

நீதிபதி செளமித்ரா சென்

கல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சௌமித்ரா சென். அவர் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் நீதிமன்றத்தால் தரப்பட்ட ஒரு பொறுப்பில் சில லட்சங்கள் நிதி முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அந்தக் குழு தந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் பதவி விலக மறுத்தார். எனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அந்த ஊழல் நீதிபதி பதவி நீக்கம் சம்பந்தமான தீர்மானத்தை பாராளுமன்றம் நிறைவேற்றக் கோரினார். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் நீதிபதிக்கு எதிராக வாக்களித்தனர். அடுத்து மக்களவையின் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே அந்த நீதிபதி ராஜினாமா செய்தார்.

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளுமே 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

தப்பி பிழைத்த நீதிபதி பரிதி வாலா

அடுத்து 2015 ஆம் ஆண்டில் குஜராத் ஐகோர்ட் நீதிபதி பரிதி வாலா  அளித்த தீர்ப்பு ஒன்றில் இந்தியா பின்னோக்கி செல்வதற்கான முக்கிய காரணம் இட ஒதுக்கீடு என்று கூறியிருந்தார். இதனை எதிர்த்து மக்களவையைச் சேர்ந்த 58 உறுப்பினர்கள் அந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானத்தை தாக்கல் செய்யவும் அவர் உஷாராகி, அவரது தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கிவிட்டார். இதனால் தப்பித்தார். அவர் இப்பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ளார். எதிர்காலத்தில் தலைமை நீதிபதியாகவும் ஆகவும் வாய்ப்புள்ளது.

தற்போது சுப்ரீம் கோர்ட்டை அடுத்து தலைமை நீதிபதியும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களும் நீதிபதி யஸ்வந்த் வர்மா பணி நீக்கம் செய்வது தொடர்பான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீதிமன்றத்தின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் சாதாரண மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!