தேவையா இந்த ரோட் ஷோ பந்தா?ஏமாந்துடாதீங்க முதலமைச்சரே…!

தேவையா இந்த ரோட் ஷோ பந்தா?ஏமாந்துடாதீங்க முதலமைச்சரே…!

திருச்சியில் எல்லோரும் எதிர்பார்க்கும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைக்க தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எட்டாம் தேதி மதியம் திருச்சி வந்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாளை ஒன்பதாம் தேதி பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். முதலமைச்சரின் வருகைக்காக கடந்த சில நாட்களாக இரவும் பகலுமாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் பாரம்பரியப்படி முதலமைச்சர் வரும் வழியில் மக்களை திரட்டி நிற்க வைத்து அவர்கள் முதலமைச்சரை நோக்கி மகிழ்ச்சியோடு கையசைக்கும் வண்ணம் அமைச்சர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மன்னராட்சி காலத்தில் மன்னர் நகர் வலம் வரும் போது “இந்த மன்னரால் தானே நாம் இந்த தேசத்தில் அச்சமின்றி நிம்மதியாக வாழ்கிறோம்” என்று மக்கள் சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று இதே வேலையை செய்தார்கள். இப்போது மக்களாட்சி அரசுகளும் முதலமைச்சரை அல்லது பிரதமரை மன்னராகவே சித்தரித்து “ரோடு ஷோ” நடத்த தொடங்கி இருக்கிறார்கள்.

இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகள் அல்வாவை வெட்டி எடுத்தது போல் அப்புறப்படுத்தப்பட்டு கொண்டு போய் உய்யக் கொண்டான் வாய்க்கால் கரையில் கொட்டப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதர் தன்னுடைய கட்டிடத்தை இடித்து ஏதாவது ஒரு பொது இடத்திலோ அல்லது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலோ, சாலை ஓரத்திலோ கொட்டினால் அவருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சிக்கு சட்டப்படி உரிமை உள்ளது.

அந்த வேலையை மாநகராட்சியே செய்தால்…. ?

குறிப்பிட்ட இடத்தில் சாலையின் அகலம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால் அங்கே விளம்பர தட்டிகள் வைக்க கூடாது என்று அரசாங்க உத்தரவு தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி கலைஞர் அறிவாலயத்தின் வாசலில் அப்படி வைக்கப்பட்ட போர்டை முழுமையாக மறைத்து முதலமைச்சர் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சி தொடர்பான பிரம்மாண்ட பிளக்ஸ்களை அமைத்துள்ளார்கள்.

முதலமைச்சர் வரும் சாலைகள் புதிதாக போடப்பட்டு சாலை ஓர தடுப்பு சுவர்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு நகரெங்கும் பளபளப்பாய் காட்சியளிக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாக நகரின் போக்குவரத்து எந்த இடத்திலும் மறிக்கப்பட்டு எந்த இடத்திலும் மாற்றப்பட்டு எங்கே இருந்து கிளம்பி எங்கே போய் சேர்வோம் என்பதே தெரியாத பயணமாக திருச்சி மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே திருச்சியின் தெற்கு பகுதியான தில்லைநகர், ஜங்ஷன் பகுதிகளையும் வடக்கு பகுதியான சத்திரம் பேருந்து நிலையப் பகுதியையும் இணைக்கும் மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. எனவே சாதாரணமாகவே திருச்சியின் வடக்கு – தெற்கு பகுதியை இணைக்கக்கூடிய கரூர் பைபாஸ் பாலம், பாலக்கரை வழி எல்லாம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் வருகையால் செய்யப்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கின்றன.

வேலைக்கு செல்வோர் மட்டுமின்றி நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தப்பவில்லை.

பொதுவாகவே குறுகலான திருச்சி சாலைகள் இரண்டு ஓரத்திலும் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே கருப்பு சிவப்பு வண்ணத்தில் மேடைகள் போடப்பட்டு அதில் காவடி, கரகம், குறவன் குறத்தி ஆட்டம் என பல்வேறு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. இதையெல்லாம் பார்த்து “நமது ஆட்சியில் மக்கள் தேவைக்கு அதிகமாகவே வருமானம் ஈட்டி ஆடிப்பாடி மகிழ்ச்சியாக களிப்புடன் இருக்கிறார்கள்” என்று நம்ப போகிறார் நம்முடைய முதலமைச்சர் 🤣🤣

செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அப்போதிருந்த அமைச்சர்கள் அவரது கண்ணைக்கட்டி அவர் கவனத்திற்கு எந்த விஷயமும் போகாமல் ‘நாடெங்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சாலை எங்கும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது’ என்று ஒரு ஷோ காட்டி 96 சட்டமன்றத் தேர்தலில் அவரை படுகுழியில் தள்ளினார்கள். பர்கூரில் அவரே தோற்றுப் போனார்.

ஆனால் கருணாநிதி அப்படி அல்ல; கட்சிக்காரர்கள் சொல்வதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ,அதிகாரிகள் சொல்வதை அலசி பார்த்துவிட்டு தனது நம்பிக்கையான நண்பர்கள், பத்திரிகையாளர்கள் சொல்வதை உள்வாங்கி ஒட்டுமொத்தத்தையும் அலசி, யார், யாருக்காக எப்படிப்பட்ட தகவலை சொல்லி இருப்பார்கள் என்பதை தானே யூகித்து இறுதி முடிவு எடுத்து சாணக்கியமாக செயல்படுவார்.

வார்த்தைக்கு வார்த்தை “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று தன்னை பிரகடனப்படுத்தும் தற்போதைய முதலமைச்சர் இதை எல்லாம் கொஞ்சம் மனதில் வைத்தால் நல்லது.

“ஏற்கனவே நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, கவர்னர் நிறுத்தி வைத்த மசோதாக்களின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்விக்கான நிதி தருவோம் என்கிற மத்திய அரசுக்கு கொடுத்த பதில், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் காட்டும் வேகம் என எல்லா மாநில முதலமைச்சர்களும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் ஆட்சி நடத்தும் உங்களுக்கு எதற்கு இந்த வேஷம் போடும் வேலை ? செய்வதை திருந்த செய்தாலே மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம். அதை விடுத்து இந்த அமைச்சர்கள் நடத்தும் ரோடு ஷோக்கள் உங்களுக்கு தேவையில்லாதது.

வட்டச் செயலாளர் நகரச் செயலாளர் என ஆளுக்கு இத்தனை வேன், இத்தனை ஆள் அனுப்ப வேண்டும் என்று ஆள் பிடிக்க வாகனங்கள் கிளம்பிவிட்டன. ஒரு ஆளுக்கு 300 ரூபாய் மற்றும் இத்தியாதி இத்தியாதி என மனிதர்களை வாடகைக்கு பிடிக்க உங்கள் கட்சிக்காரர்கள் ஆளாய் பறந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அழைத்து வரும் மக்கள் நீங்கள் போகும் பாதையில் நின்று மகிழ்ச்சியாக உங்களுக்கு கையசைக்க, அதற்கு நீங்கள் பதிலுக்கு கையசைத்து விட்டு போய்விடுவீர்கள். இதனால் சிரமப்பட்ட வேதனைப்பட்ட மக்கள் உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமா என்று யோசித்து பார்ப்பார்கள்.

கடந்த சில நாட்களாக இந்த சாலை ஓர கூத்துகளுக்காக பல அன்றாடங் காய்ச்சிகள் தங்கள் கடையை மூடும்படி நிர்பந்தப்படுத்தப்பட்டு வருமானத்திற்கு வழியின்றி வேதனைப்பட்டு வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே வெட்டி, இங்கே ஒட்டி இந்த வீடியோக்களை திமுகவின் ஐடி விங் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும். “பிரதமர் போகும் வழியில் குடிசைகளை திரை கட்டி மறைக்கிறார்கள்” என்று குற்றம் சொன்ன திமுக அதே காரியத்தை செய்யலாமா ?

“ஒரு டீ வாங்கி கொடுத்தால் இரவு முழுதும் வேலை செய்யும் அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள்” என்று மாற்றுக் கட்சிக்காரர்களே கொண்டாடிய உங்கள் கட்சியே சோசியல் மீடியா விளம்பரத்திற்கு மாறிவிட்ட பின்னும் தமிழ்நாட்டு மக்கள் இந்த தெருவோர கூத்துகளை பார்த்து தான் உங்கள் ஆட்சியின் அளவை மதிப்பிடுவார்கள் என்று நினைத்தால் தமிழ்நாட்டு மக்களை நீங்கள் எங்கே வைத்திருக்கிறீர்கள் ?

உங்கள் மனதை குளிர்விக்க அமைச்சர்கள் செய்யும் காரியம் உங்களுக்கே ஆப்பாக அமையப் போகிறது.

“நாடு போற்றும் நான்காண்டு நல்லாட்சி” என்று சொன்னதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இப்படிப்பட்ட ஆடம்பர அலங்காரங்கள் தேவை இல்லையே. அமைச்சர்கள் அவர்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்ள இப்படியெல்லாம் செய்வார்கள்.

ஏமாந்துடாதீங்க முதலமைச்சரே…!

✍️ஷானு,
செய்தியாளர்.

error: Content is protected !!