இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா!- சபாநாயகர் அறிவிப்பு!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா!- சபாநாயகர் அறிவிப்பு!

லங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகிறது. இதனால் கொதித்து போயிருக்கும் மக்கள் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர். நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றினர். மனித சுனாமியாக அலை அலையாக கொழும்பு நோக்கி வந்த மக்களிடம் சிக்கினால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையில் இருந்து முன்கூட்டியே வெளியேறி இருந்தார். பின்னர் அனைத்துக்கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தியதால், கடந்த 13-ந்தேதி பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அறிவித்ததுபோல அன்று ராஜினாமா செய்யவில்லை.

மாறாக தனது மனைவி லோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை மாலத்தீவை அடைந்தார். அங்கிருந்தவாறே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். இதன்படி இடைக்கால அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்தார். அத்துடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்குக்கும் உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். அந்த அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதற்கிடையே மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத் உதவியால் மாலத்தீவில் புகுந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக அங்கு வாழும் இலங்கை மக்களும், மாலத்தீவு மக்களில் ஒரு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினர். அதேநேரம் மாலத்தீவு அரசிலும் கோத்தபய விவகாரம் பெரும் சலசலப்பை கிளப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, மனைவி லோமா, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகியோர் நேற்று மாலையில் சிங்கப்பூர் போய் சேர்ந்தனர். இதை சிங்கப்பூர் அரசும் உறுதி செய்தது. அதேநேரம் அங்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளது. இலங்கையின் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபய ராஜினாமா செய்த தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சபாநாயகர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகல் தொடர்பாக குழப்பம் நிலவி வந்த நிலையில் சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

error: Content is protected !!