ரியோ ஒலிம்பிக்கில் இந்தியர்களின் மானம் காத்த மங்கை – சாக்ஷி
ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்த ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் புதன்கிழமை ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து புதிய வரலாறு படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக் 2016-ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார்.அதேபோல், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, யோகேஷ்வர் தத் மற்றும் சுஷில் குமார் ஆகியோர் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றவர்கள் ஆவர்.

2002-ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014-ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவரது திறமையை அங்கீகரிக்கும் மற்றும் இந்தியாவுக்கே முதன் முதலாக வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்த சாக்ஷி மாலிக்கை கவுரவிக்கும் வகையில் அரியானா அரசு ரூ. 2.5 கோடி பரிசு வழங்கி, அரசு வேலையும் வழங்கி கவுரவித்துள்ளது.


