பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீட்கபட்ட விவகாரம்!

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீட்கபட்ட விவகாரம்!

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்தவர்கள், “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது” என்ற பதிவை வெளியிட்டனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். உடனடியாக ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீட்கப்பட்டு, அதில் இருந்து வெளியிடப்பட்ட பதிவும் டெலிட் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குபவர், அரசின் திட்டங்கள், அரசு தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக தனது சமூக ஊடக பக்கத்தில் அவர்வெளியிட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு சார்ந்து ஒரு ட்விட்டர் கணக்கும், தனிப்பட்ட முறையில் ஒரு ட்விட்டர் கணக்கும் உள்ளன. அரசு சார்ந்த ட்விட்டர் கணக்கான PMO Indiaவை 45.4 மில்லியர் பேரும், தனிப்பட்ட கணக்கான Narendra modi கணக்கை 73.4 மில்லியன் பேரும் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளனர்.

மேலும் அதில் இருந்து, “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களும் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டு மோசடி லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். பிரதமரின் தனிப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டது பின்னரே தெரியவந்தது.

உடனடியாக ஹேக் செய்யப்பட கணக்கு மீட்கப்பட்டு, அதில் இருந்து வெளியிடப்பட்ட பதிவும் டெலிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரதமரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் அந்த கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட பதிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிரதமர் அலுவலகத்துடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பு வைத்துள்ளோம். அதனல் ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு உடனடியாக பாதுகாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். இந்த குறுகிய நேரத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கில் வேறு எந்த தாக்கமும் ஏற்படுத்தப்படவில்லை என தங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!