பார்லிமெண்ட்டில் அமளி எதிரொலி: இதுவரை 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

பார்லிமெண்ட்டில் அமளி எதிரொலி: இதுவரை 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

புதிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த டிச.13ம் தேதி வழக்கம் போல் மக்களவை தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் மாடத்திலிருந்து 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்து புகை குண்டுகளை வீசினர். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் மக்களவை வெளியேயும் பெண்ட உட்பட 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நான்கு பேரையும் போலீஸார் பிடித்து கைது செய்தனர். இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பதில் அளிக்க மறுத்து கேள்வி கேட்டும் எதிர்க்கட்சி எம்.பிக்களை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்து வருகிறது.

கடந்த டிச.15ம் தேதிதான் கேள்வி எழுப்பிய கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கசேடன், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் மக்களவை கூடியது. இன்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமுன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து தி.மு.கவை சேர்ந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், செல்வம், சி.என்.அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு இன்று மட்டும் மக்களவையில் 46 எதிர்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்வதற்கு தகுதியானது அல்ல எனக் கூறிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவை சமூகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவைத் தலைவரின் கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து முதலில் அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் மீண்டும் அமளி தொடர்ந்ததால் மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை 2 மணிக்குக் கூடியதும் 2023 ஜம்மு – காஷ்மீர் மறு சீரமைப்பு சட்ட (இரண்டாவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு (திருத்தம்) சட்ட மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.. எனினும், அவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரமோத் திவாரி, கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மனோஜ் ஜா உள்பட 45 பேர் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஏற்கெனவே, ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 46 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 92-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மோடியின் மத்திய அரசின் இத்தகைய அராஜக நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!