பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்! – மோடி பாராட்டு!

பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை நிறுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்வது, வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக நம் நாட்டுக்குச் சொந்தமான செயற்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. ஆனால் இந்த ரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மாதத்தில் இருந்து கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ராக்கெட் ஏவும் பணிகளை இஸ்ரோ மீண்டும் தொடங்கியது. அதன்படி, பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற புவிகண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ இன்று 3.12 மணிக்கு விண்ணில் ஏவியது.
நவீனரக இஓஎஸ்- 01 செயற்கைகோள் புவிகண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளை துல்லியமாக மேற்கொள்ளும். இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி சி-49 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் கொண்டது. இது பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும். மேலும், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், “பிஎஸ்எல்வி- சி 49 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது; அனைத்து செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டன. 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம் – கொரோனா காலத்திற்கு பிறகு செயல்படுத்திய திட்டம் வெற்றியை தந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்களை கொண்டு பி.எஸ்.எல்.வி- 49 ராக்கெட்டை வடிவமைத்தோம். ராக்கெட் ஏவுதலில்பங்காற்றிய தொழில் நுட்ப பணியாளர்களுக்கு நன்றி என கூறி உள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.