எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் -‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance)!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பெங்களூருவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் மோடியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை பலப்படுத்துவது, புதிய கூட்டணியை உருவாக்குவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் பெங்களூரூவில் நடைபெற்றுது. சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதோடு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல தலைவர்களும் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது ஏன்? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வி எழுகிறது. மோடிக்கு எதிராக இந்தியாவே உள்ளது என்பதற்கு சான்றாக இந்தியா என பெயர் என எதிர்க்கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.
இந்த 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் 26 முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களான நாங்கள், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துகிறோம்.
நமது குடியரசின் தன்மை பாஜகவால் திட்டமிட்ட முறையில் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையான மற்றும் அச்சுறுத்தும் வகையில் சிதைக்கப்படுகின்றன.
மணிப்பூரை அழித்த மனிதாபிமான துயரம் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம். பிரதமரின் மௌனம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது. மணிப்பூரை மீண்டும் அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதற்கான அவசரத் தேவை உள்ளது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை எதிர்த்துப் போராடவும், எதிர்கொள்ளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.

பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் பங்கு அனைத்து அரசியலமைப்பு விதிமுறைகளையும் மீறியுள்ளது. அரசியலில் எதிர்க்கருத்து உடையவர்களின் குரல்வளையை நெரிக்க அரசு நிறுவனங்களை பாஜக ஏவி வருவதுடன் நமது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகள் மத்திய அரசால் தீவிரமாக மறுக்கப்படுகின்றன.
தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான எங்கள் உறுதியை நாங்கள் வலுப்படுத்துகிறோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சிறு குறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியது, இதன் விளைவாக நமது இளைஞர்களிடையே பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் பொறுப்பற்ற நண்பர்களுக்கு பாஜக அரசு விற்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தனியார் துறையுடன் இனைந்து வலுவான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பையும் வன்முறையையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான விசாரணையைக் கோருதல்; மற்றும், முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்.
நமது சக இந்தியர்களை குறிவைத்து, துன்புறுத்தவும், ஒடுக்கவும் செய்யும் பாஜகவின் முறையான சதியை எதிர்த்துப் போராடத் தீர்மானித்துள்ளோம்.
வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி இந்திய அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் மற்றும் நீதி – அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை சிதைக்கிறது. இந்திய வரலாற்றை புதுப்பிக்கப்போவதாக பாஜக தொடர்ந்து கூறிவருவது சமூக நல்லிணக்கத்தை அவமதிக்கும் செயலாகும்.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டத்துடன் மாற்று அரசியலை வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


