மைசூரு தசரா படுகிராண்டா நிறைவடைந்தது! – வீடியோ!
சர்வதேச அளவில் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த அக்டோபர் 2ம் தேதி தொடங்கி. நாள்தோறும் பல்வேறு மைசூரு அரண்மனையில் பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கு நடந்த தசரா விழாவை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் தசரா விழா நேற்று யானை ஊர்வலத்துடன் நிறைவடைந்தது.

1610-இல் அன்றைய மைசூரு மன்னர் ராஜா உடையாரால் தொடக்கி வைக்கப்பட்ட தசரா விழா, 406-ஆவது ஆண்டாக மைசூரில் கடந்த 10 நாள்களாகக் கொண்டாடப்பட்டது. செவ்வாய்க்கிழமை அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் நந்தி பூஜை செய்து, மாநில மக்களின் நல்வாழ்வுக்காக முதல்வர் சித்தராமையா வழிபட்டார். விழாவில், உடையார் மன்னர் குடும்பப் பட்டத்து இளவரசர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா, கூட்டுறவுத் துறை அமைச்சர் மகாதேவபிரசாத், மைசூர் மாநகராட்சி மேயர் பி.எல்.பைரப்பா, துணை மேயர் ஜி.எச்.வனிதா, மாவட்ட ஆட்சியர் டி.ரந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையிலிருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அர்ஜூனா என்ற யானை சுமந்து சென்றது.5-ஆவது முறையாக தங்க அம்பாரியைச் சுமந்து செல்லும் அர்ஜூனா யானையுடன் காவிரி, விஜயா, சைத்ரா, பலராமா, அபிமன்யூ, பிரசாந்த், ஹர்ஷா, கோபி, கோபாலசுவாமி, துர்கா பரமேஸ்வரி ஆகிய யானைகளும் சென்றன. யானைகள் ஊர்வலத்துடன் 116 கலைக் குழுக்கள், 46 அலங்கார வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
3 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக் குழுக்கள், நடனக் குழுக்கள் சாலையில் இருபுறங்களில் ஆவலோடு காத்திருந்த மக்களை வெகுவாகக் கவர்ந்தன.பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய மற்றும் கலாசார நடனங்கள், ஆடல் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின.
தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊர்வலத்தை காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனர். அரண்மனை வளாகத்தில் மட்டும் யானை ஊர்வலத்தை காண வருகை தரும் மக்கள் அமர 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன..இதுதவிர, சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் அமர்ந்து யானைகள் ஊர்வலத்தை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
https://www.youtube.com/watch?v=hbSYDj0-J_s
தசரா விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா தொடக்கி வைத்தார். விழாவில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் மகாதேவ பிரசாத், மகாதேவப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


