தோனிக்கு பத்ம பூஷண் விருது..ஜனாதிபதி வழங்கினார்!

தோனிக்கு பத்ம பூஷண் விருது..ஜனாதிபதி வழங்கினார்!

நம் நாட்டின் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனி பத்மபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. தோனி இந்திய கிரிக்கெட் அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருடைய தலைமையில் இந்திய அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகளை வென்றது. டெஸ்ட் அரங்கிலும் சிறந்த இடத்தைப் பிடித்தது. இதனால் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா ,பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் உள்பட 42 பேர் விருது பெற்றனர். மீதமுள்ள 42 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட விழாவில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ராணுவ உடையில் வந்து குடியரசுத் தலைவரிடம் பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்டோர் பத்ம விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011) மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.