32°C
விளம்பரம்
Advertisement

மக்கள் தலைவா-விமர்சனம்!

admin Published: June 19, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


எவரும் எதிர்பாராத தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் புதியவர்களின் அரசியல் வருகையை மையமாக வைத்து ஒரு முழுநீள அரசியல் நையாண்டி (Political Satire) திரைப்படத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்தேவ். வெற்றி பெற்றவர்களின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியல் வியாபாரத்தையும், கார்ப்பரேட் தந்திரங்களையும் தன் பார்வையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கதையும், காட்சிகளும் கற்பனை என்று படக்குழு சொன்னாலும், தற்போதைய காலக்கட்ட நிஜ அரசியல் சம்பவங்களின் பிரதிபலிப்பாகவே திரைக்கதை நகர்கிறது. இது படத்தைத் தொடக்கத்தில் சுவாரஸ்யமாக பயணிக்க வைத்தாலும், போகப்போக தான் சொல்ல வந்த கருத்தை மறந்து, படத்தில் தான் கமிட் செய்திருக்கும் கேரக்டர் போலவே இயக்குநர் ராம்தேவும் குழப்பமடைந்திருப்பது திரைக்கதையின் போக்கில் அப்பட்டமாகத் தெரிகிறது.

கதைக்களம்: சினிமாவும்… போலி விளம்பர அரசியல் விளையாட்டும்!

எந்த வேலைக்கும் செல்லாமல், சோம்பேரியாக ஊர் சுற்றிக்கொண்டு, போலியான சில போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர் ரவி மரியா. இவருக்கு, உலகளவில் முன்னணி வெளிநாட்டு நிறுவனத்தின் உயரிய பதவியில் இருக்கும் பெரும் செல்வந்தரான ராதாரவி மூலம் திடீரென ஒரு ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடிக்கிறது.

தன் அபார பணபலத்தை வைத்து தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் விளையாட்டு விளையாடத் திட்டம் போடுகிறார் ராதாரவி. அந்தச் சதுரங்க ஆட்டத்திற்குப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள ரவி மரியாவை அவர் முடிவு செய்கிறார். அதன்படி, ரவி மரியாவை முதலில் சினிமாவில் அதிரடி நாயகனாக்குகிறார். அதன் மூலம் கிடைக்கும் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரது தலைமையில் ஒரு புதிய அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்குகிறார்.

ராதாரவி பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் நூலுக்கு ஏற்ப அப்படியே ஆடும் ரவி மரியா, அவரது மாஸ்டர் பிளானின்படி மக்களுக்கு நிஜமாகச் சேவை செய்வதைக் காட்டிலும், போலியான கார்ப்பரேட் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் எளிதில் சென்றடைகிறார். மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஒரு ‘மக்கள் தலைவராகவும்’ உருவெடுக்கிறார்.

தேர்தல் நாள் நெருங்கும் வேளையில், ராதாரவியும் அதிகாரப்பூர்வமாக அந்தப் புதிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக ரவி மரியா ஒரு விபத்தில் சிக்கி, மேல் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறார். இதனால், “அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?” என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது. அப்போது ராதாரவி எடுக்கும் ஒரு அதிரடி முடிவு, தமிழகத்தின் அரசியல் வரலாற்றையே புரட்டிப்போடுகிறது. அதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது, ராதாரவியின் இந்த விபரீத அரசியல் விளையாட்டுக்கான உண்மையான பின்னணி என்ன, என்பதைச் சமக்கால அரசியலை நையாண்டி செய்யும் விதத்தில் சொல்வதுதான் ‘மக்கள் தலைவா’ படத்தின்  கதை.

நடிகர்களின் பங்களிப்பு: கதாபாத்திரங்களின் பலமும் பலவீனமும்

  • ரவி மரியா: வழக்கமாக வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் மிரட்டும் ரவி மரியா, இதில் கதையின் நாயகனாகத் தனக்கான பணியைக் குறையின்றி செய்திருக்கிறார். காதல் பாடல், அனல் பறக்கும் அரசியல் மேடைப் பேச்சு என இதுவரை பார்க்காத ஒரு புதிய ரவி மரியாவை இதில் திரையில் பார்க்க முடிகிறது. நடிப்பில் பெரிய மாற்றங்களை வெளிக்காட்டவில்லை என்றாலும், தான் ஏற்ற ‘தமிழ் குடிமகன்’ என்ற கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளார்.

  • ராதாரவி: பணமும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற சாணக்கியத்தனமும் இருந்தால் அரசியலில் மிக எளிதில் வெற்றி பெறலாம் என்ற கசப்பான உண்மைக்குத் தன் அசாத்திய நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ராதாரவி.

  • பழ கருப்பையா: தற்போதைய நவீன தொழில்நுட்பக் காலக்கட்டத்தில், இன்னும் பழமையான அரசியல் பாதையிலேயே பயணிக்கும் மூத்த அரசியல்வாதிகளின் அவலநிலையையும், அவர்களால் அபாயக் கட்டத்தில் சிக்கும் கட்சிகளின் பரிதாப நிலையையும் வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் நடித்து, தன் அனுபவ நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் சிரிக்க வைக்கிறார்.

  • இதர நட்சத்திரங்கள்: பெட்டி வாங்கும் நடுநிலை அரசியல்வாதிகளின் அடையாளமாக நாஞ்சில் சம்பத், நாயகனின் நண்பர் என்பதால் அமைச்சராகும் அதிஷ்டம் பெற்ற கஞ்சா கருப்பு, மற்றொரு நண்பராக அக்னி எஸ்.வருண், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தட்டிக்கேட்கும் ஆட்டோ ஓட்டுநராக இயக்குநர் பேரரசு, யூடியூபராக பயில்வான் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் ரங்கநாதன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வாக அமைந்து உலா வருகிறார்கள். கதாநாயகி என்ற பெயரில் வரும் அக்‌ஷரா விஜய் ஒரு பாடல் காட்சியில் மட்டும் வந்து போகிறார்.

தொழில்நுட்பக் குழு: பாராட்டுக்குரிய அம்சங்கள்

ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர், தன்னிடம் இருந்த குறைந்தபட்ச வசதிகளை வைத்தே காட்சிகளை மிகவும் தரமாகப் படமாக்கியிருக்கிறார். குறிப்பிட்ட ஒரே லொகேஷன் என்றாலும் அதை வெவ்வேறு கோணங்களில் கேமராவில் சிறை பிடித்து வித்தியாசத்தைக் காட்டியிருப்பவர், எளிமையான இடங்களைக் கூட ரசிக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளார்.

துளசிராமனின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்களோடு கேட்கும் ரகம். பின்னணி இசையும் காட்சிகளின் வேகத்திற்கு ஏற்பப் பயணித்திருக்கிறது.

படத்தில் அதிகமான வசன காட்சிகள் (Dialogues) இருந்தாலும், காட்சிகளின் நீளத்தை உணர்ந்து கச்சிதமாகக் கத்தரித்து, முழுப் படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரத்திற்குள் நேர்த்தியாக அடக்கிய படத்தொகுப்பாளர் துர்கேஷை தாராளமாகப் பாராட்டலாம்.

ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை (Verdict)

ஏகப்பட்ட அரசியல் நையாண்டி படங்களைப் பார்த்திருக்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு, தற்போதைய அரசியல் மாற்றங்களை நையாண்டியாகச் சொல்லி சிரிக்க வைப்பதோடு, சிந்திக்க வைக்கவும் முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்தேவ். எனினும், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, போதிய அக்கறை காட்டியிருந்தால் ‘அம்மாவாசை’ அரசியல் போல் இத்திரைப்படம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கலாம். போதிய மேக்கிங் நேர்த்தி இல்லாததால் இந்த பொலிட்டிக்கல் சடாயர் முழுமையாக எடுபடவில்லை.

மார்க்: 2.25 / 5

உடனடி செய்திகள்