🎬மகா சேனா – விமர்சனம்!
‘மகா சேனா’ – தலைப்பும் கதைக்களமும் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தாலும், இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் தான் சொல்ல வந்ததைச் சரியான முறையில் பார்வையாளருக்குக் கடத்தத் தவறிய ஒரு முயற்சியாகவே இந்தப் படம் உள்ளது.
📜 கதைச் சுருக்கம்
ஊரின் முக்கியமான தலைக்கட்டு செங்குட்டுவன் (விமல்), மனைவி ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதே ஊரை ஒட்டிய காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமலின் ஊரைச் சேர்ந்தவர்களைக் கொல்லவும், ஊரிலுள்ள ஒரு சாமி சிலையை அபகரிக்கவும் துடிக்கிறது. அதோடு, காட்டுக்குள் ட்ரக்கிங் வரும் ஒரு கல்லூரி மாணவர் குழு, அவர்களைச் சுற்றிய கிளைக்கதை எனப் படம் பல கோணங்களில் பயணிக்கிறது. விமல் முன்னெடுக்கும் குரங்கனி திருவிழாவில் சாமி சிலையைத் திருட, வனத்துறை அதிகாரி ஜான் விஜய் ஒரு திட்டம் போடுகிறார். அந்தத் திட்டத்தின் பின்னால் முக்கிய வில்லன் கபீர் துஹான் சிங் இருக்கிறார். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? இரண்டு இனக்குழுக்களுக்கான மோதல் எப்படி முடிந்தது? என்பதே ‘மகா சேனா’வின் கதை.
🎥 திரைக்கதை மற்றும் இயக்கம்
மூன்று விதமான கதைகளை ஒரே திரைக்கதைக்குள் கொண்டு வர முயன்றிருப்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் இந்தப் பல கதைப்பகுதிகளைத் தொகுப்பதில் பெரும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். உருப்படியாக ஏதாவது ஒரு கதையை மட்டும் வைத்துத் திரைக்கதையைப் பின்னப்பட்டிருந்தால் படம் கவனம் பெற்றிருக்கும்.
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், தான் சொல்ல வந்ததைச் தெளிவில்லாமல் சொல்லியிருப்பதோடு, காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் சரியான முறையில் கையாளத் தவறியிருக்கிறார். பல்வேறு உணர்வுப்பூர்வமான பகுதிகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களாகிய நமக்குள் இந்தப் படம் துளியும் கனெக்ட் ஆகவில்லை.
குறிப்பாக, படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் தேவையற்ற அளவில் நீண்டிருப்பது பெரும் சோர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இறுதிக்கட்டச் சண்டைக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருந்தால் விறுவிறுப்பு கூடி இருக்க வாய்ப்புண்டு.
🎭 நடிகர்கள்
-
விமல் ஹீரோவாக இல்லாமல் ஒரு கேரக்டராக வந்து போகிறார்.
-
பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக நடித்திருப்பவர் அதற்காகக் கொஞ்சம் கூட மெனக்கெடாமல், வழக்கம் போல் நடிக்கத் தெரியாமல் வந்து போயிருக்கிறார்.
-
ஹீரோயினாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வீரப் பெண்ணாகக் கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், வீரத்தை வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளைப் பயன்படுத்தத் தவறியுள்ளார்.
-
யோகி பாபு வரும் காட்சிகள் வழக்கம் போல் எடுபடவில்லை.
-
வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் கோமாளித்தனமாக நடித்திருக்கிறார்.
-
வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் தங்களின் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியுள்ளார்கள்.
🎶 தொழில்நுட்பக் கலைஞர்கள்
-
ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு DR, காடு சார்ந்த லொக்கேஷன்களில் நல்ல நல்ல ஷாட்களை எடுத்துள்ளார். இருப்பினும், சில இடங்களில் மேட்ச்கட் சரியாக அமையவில்லை, தொடர்ச்சியான (Continuity) ஷாட்களிலும் நிறையத் தொய்வு காணப்படுகிறது.
-
A. பிரவீன் குமார் இசையில் இறுதிக் காட்சியில் வரும் சாமி பாடல் அசத்தலாக இருந்தது.
-
உதய் பிரகாஷ் U.P.R பின்னணி இசையைச் சில இடங்களில் பட்டாசாக அமைத்துள்ளார், ஆனால் சில இடங்களில் சொதப்பல்.
-
தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், முன்னரே சொன்னது போல் தேவையற்ற சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.
ஒரு வரி முடிவு
தலைப்பு மற்றும் கதைக்களம் கவனம் ஈர்த்தாலும், இயக்குநர் தினேஷ் கலைச்செல்வனின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் எந்தவிதத்திலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் – மகாசேனா – அரசியின் எடுபிடி


