ரெசுல் பூக்குட்டி வடிவமைத்த ‘தி லிஸ்ஸி லக்ஷ்மி ஸ்டுடியோஸ்!- கமல் திறந்து வைத்தார்

ரெசுல் பூக்குட்டி வடிவமைத்த ‘தி லிஸ்ஸி லக்ஷ்மி ஸ்டுடியோஸ்!- கமல் திறந்து வைத்தார்

ரெசுல் பூக்குட்டி வடிவமைத்த தனித்துவம் வாய்ந்த, உன்னதமான தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஒரு ஒலிச்சேர்க்கை(டப்பிங்) நிறுவனமான, “தி லிஸ்ஸி லக்ஷ்மி ஸ்டுடியோஸ்” ஐ உலக நாயகன் கமல்ஹாசனும், ஆஸ்கார் நாயகனும் கூட்டாக ஜூலை 3ம் தேதி, திங்கட்கிழமை திறந்து வைத்தார்கள். ரெசுல் பூக்குட்டி இத்தகைய ஒரு ஒலிச்சேர்க்கை நிறுவனம் வடிவமைப்பது இதுவே முதல் முறை. நடிகையும், தொழிலதிபருமான லிஸ்ஸி லக்ஷ்மியின் சமீபத்திய தொழில் முயற்சியான இந்நிறுவனம், ஏற்கனவே களத்தில் உள்ள அவரது “லீ மாஜிக் லாண்டேர்ன் ப்ரீவியூ தியேட்டர்” உடன் இணைந்து ஒரு புதிய, அற்புதமானப் பரிமாணத்தைத் திரையுலகிற்குத் தருகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசும் போது லிஸ்ஸி, “ரெசுலுடன் இணைந்து வேலை செய்வது ஒரு பெரும் பாக்கியம்” என நெகிழ்கிறார். அவருடைய உதவியும், வழிகாட்டுதலுமின்றி இந்த ஸ்டுடியோ சாத்தியமேயில்லை. இம்மாதிரியான ஒரு பன்னாட்டுத் தரம் வாய்ந்த ஒலிச்சேர்க்கை(டப்பிங்) நிறுவனம் அமைப்பதில் உள்ள மிகப்பெரிய சவால்கள் சமீபத்திய தொழில்நுட்பம், சமீபத்திய உபகரணங்கள் மற்றும் சிறந்த செவிப்புலனியல். பன்னாட்டுத் தரத்தில் இத்தகைய ஸ்டுடியோ வடிவமைப்பதில் மேற்கூறிய மூன்று காரணங்களுமே ஒரு குறிப்பிடத்தக்க செலவு காரணியாகவும் அதே சமயம் சவாலாகவும் இருப்பதால், பெரும்பாலும் இம்மாதிரியான முதலீடுகளில் யாரும் ஈடுபடுவதில்லை. இங்கு நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும், ஓராண்டுக்கும் மேலான எங்களது ஆராய்ச்சி, ஆலோசனை, மற்றும் கடின உழைப்பின் பிரதிபலிப்பு. இந்த தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு, தென்னிந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு பெருமதிப்பு சேர்க்கிறது. நாங்கள் அறிமுகப்படுத்தும் இந்த தரம், இங்கு டப்பிங் செய்யப்படும், திரைப்படங்களில் பிரதிபலிக்கும், எதிரொலிக்கும். இது திரை ரசிகர்களுக்கும் ஒரு புதிய ரசிக்கத்தக்க, நிறைவான ஒரு அனுபவத்தை தரும்.

இத்திறப்பு விழாவின் நினைவாக, ரெசுல் குழுவினர் கமல்ஹாசன், மோகன், சரத் குமார், ராதிகா, ஸ்ரீ பிரியா, சுஹாசினி, குஷ்பு, ஷோபனா, ரேவதி, மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் பிரபலமான வசனங்களை பதிவு செய்வார்கள். இதனை அடிப்படையாக கொண்டு, ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட இருக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, சென்னையில் உள்ள அனாதைப் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ இருக்கிறோம், என லிஸ்ஸி மேலும் குறிப்பிடுகிறார். இத்தருணத்தில், எல்லாம் வல்ல இறைவனுக்கும், என்னுடைய குழந்தைகள் நாசர், தரணி, மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்” என்றார்

error: Content is protected !!