கடலோர காவல் படையின் உளவுப் பிரிவில் முதல் முறையாகப் பெண்கள்
நாட்டிலேயே முதல் முறையாக கிழக்கு மண்டல கடலோர காவல் படையில் கடல்சார் பகுதிகளை ரோந்து சுற்றி வந்து கண்காணித்தல், கடலோர பகுதிகளில் குறிப்பாக சர்வதேச எல்லைப்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘டோர்னியர்’ ரக குட்டி விமானத்தில் துணை கமாண்டன்டுகள் அக்ஷி, சுனிதா (பைலட்டுகள்) மற்றும் பிரியங்கா தியாகி (பார்வையாளர்) என முழுவதும் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கடலோர காவல் படை விமான நிலையத்தை சேர்ந்த இவர்கள் 3 பேரும் கடல்மார்க்கமாக உளவு பார்க்கும் பணி தொடர்பான பயிற்சியை கடலோர பகுதிகளில் விமானத்தில் பயணம் செய்து வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளனர். கடல் மாசுப்படுதல், கடல்சார் உளவுப்பணி, தேடுதல் மற்றும் மீட்பு, கடற்கொள்ளையர்களை தடுத்தல் மற்றும் சட்டவிரோதமாக கடல் உயிரினங்களை வேட்டையாடுவதை தடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நன்கு பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் அக்ஷி 1,700 மணி நேரம், பிரியங்கா தியாகி 1,500 மணி நேரம் மற்றும் சுனிதா 1,200 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்த, அனுபவம் பெற்றவர்கள்.


