கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும் : தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் அறிவிப்பு
கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை எடியூரப்பாவும், ஒருமுறை குமாரசாமியும், ஒரு முறை பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடேயேதான் பிரதான போட்டி உள்ளது.
கர்நாடகத்தில் இட ஒதுக்கீடு பிரச்சனைகள், வடக்கு கர்நாடகத்துக்கு முக்கியத்துவம் குறைவாக அளிக்கப்படுவதாக எழுந்துள்ள பிரச்சனைகளும் அந்த மாநில முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. கர்நாடகத்துக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே உள்ள எல்லை பிரச்சனையும் முக்கியமானதாக உள்ளது. இந்த அம்சங்கள் குறித்து அரசியல்கட்சியினர் ஏற்கனவே பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் எப்போது நடத்துவது என்பது குறித்த அறிவிப்புக்காக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:
கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே மாதம் 24-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2.62 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 2.5 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42,756 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல் முறையாக 9.17 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். புதிய வாக்காளர் அடையாள அட்டைகோரி, 17 வயதிற்கு மேற்பட்டோர் 1,25,406 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏப்ரல் 1, 2023ல் 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.
கர்நாடகாவில் உள்ள பழங்குடியின மக்கள் வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 80 வயதிற்கும் மேற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் 36 தனி தொகுதி, 15 பழங்குடியினர் தொகுதி, 173 பொதுத்தொகுதிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2018ல் 61 தொகுதிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது பதற்றமான தொகுதிகள் 81 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எப்.13-ம் தேதி தொடங்கி ஏப்.20 வரை நடைபெறுகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப். 21-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்.24 கடைசிநாள் ஆகும். இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10 நடைபெறும். இதனை தொடர்ந்து மே.13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.