ஜே.இ.இ மெயின் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

நாடெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்ததால், ஜே.இ.இ மெயின் தேர்வுகள் (ஏப்ரல் அமர்வு) ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று ஜேஇஇ (JEE) மெயின் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதன்மையான 25 ஐஐடிகள், 31 என்.ஐ.டிகள் மற்றும் மத்திய அரசின் உதவியுடனான 28 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேருவதற்காக ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு (JEE Main (April) exam date) ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் மற்றும் மே அமர்வுகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.
இந்தாண்டுக்கான ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட (ஏப்ரல்) தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் என்றும், நான்காம் கட்ட (மே) தேர்வு (JEE Main (May) exam date) ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
எந்தவொரு மாணவர்களும் இதற்கு முன்னர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.