‘நிழற்குடை’ படத்தின் இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..!தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது..இதனையடுத்து ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் சிவா ஆறுமுகம் பேசும்போது,
“இந்த படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்து ஆதரவாக இருந்தனர்” என்று கூறினார்.
நாயகன் விஜித் பேசும்போது,
“கடந்த வருடம் நான் நடித்த ஒயிட் ரோஸ் என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து எனக்கு கே/எஸ் அதிகமான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது/ கதை சொல்ல வேண்டாம் என்று கூறினாலும் கூட, அரை மணி நேரம் சொன்னார்கள். கதை பிடித்து இருந்தது. எப்போது சார் தேதிகள் வேண்டும் என கேட்டபோது கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் சொல்கிறோம் என்று சொன்னதும் எனக்கு இந்த படத்தில் நாம் நடிக்கிறோமா, எதற்காக நம்மை அழைத்தார்கள், என்ன கதாபாத்திரம் பண்ண போகிறோம் என சிறிய குழப்பமும் சந்தேகமும் வந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் எனக்கு அழைப்பு வந்தபோது இந்த படத்தில் நான் நடிப்பதை உறுதி செய்தார்கள். அது மட்டுமல்ல என்னுடைய மகளுக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். தேவயானி இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் கொஞ்சம் எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் படப்படிப்பிலிருந்து அவர் என்னை எளிதாக உணர வைத்து விட்டார், இந்தப்படத்தில் நான் நடித்தது எல்லாமே பல சீனியர் நடிகர்களுடன் தான்” என்று கூறினார்.
நாயகி கண்மணி பேசும்போது,
“இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சின்னத்திரையில் தான் நடித்து வந்தேன். அதேசமயம் இந்த படத்தில் நடிக்க வந்தபோது எப்படி ஒரு பெரிய நடிகையை நடத்துவார்களோ அதேபோல முறையாக, நல்ல விதமாக நடத்தினார்கள். என்னுடைய முதல் மேடை இது. சின்னத்திரைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் எனக்கு நீங்கள் கொடுத்து வந்த அதே அன்பையும் ஆதரவையும் வெள்ளித்திரையிலும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். படம் சிறிய படமாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே இதற்கு மிகப்பெரிய கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
நடிகர் ராஜ்கபூர் பேசும்போது,
“இப்போது வரும் படங்களில் எல்லாமே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் ஆனால் இது எண்பதுகளில் வந்தது போன்று குடும்ப அம்சத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று வேலை வாய்ப்பு தேடும் ஒரு தம்பதியினரின் சிரமத்தை இது சொல்கிறது. எல்லோரும் வெளிநாட்டுக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டுமா என்கிற கேள்வியையும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற படிப்பினையையும் இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
நடிகை தேவயானி பேசும்போது,
“என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.
பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,
நானும் ரோஜாவும் திருமணம் செய்தது, குஷ்பூவும் சுந்தர்சியும் திருமணம் செய்தது எல்லாம் பரபரப்பு செய்தி ஆனால் தேவயானி திருமணம் செய்தது மற்றவர்களுக்கெல்லாம் ஷாக்கிங் ஆன செய்தி. உங்கள் திருமணத்திற்கு பிறகான தேவயானியின் வாழ்க்கை திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு பாடம் தான். அந்த கலாச்சாரத்தை இந்த படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். கத்திரி வெயிலுக்கு எப்படி குடை சிறப்பாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும். அண்ணன் சீமான் அவர்கள் கருப்பாக இருந்தார்கள். சிவப்பாக இருந்தார்கள்.. இப்போது எந்த வண்ணமும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்கள். எப்போதும் இதேபோல இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,
“எங்க அம்மா எனக்கு இந்த பெயரை வைத்து பெருமைப்பட வைத்துவிட்டார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரனின் நிஜ பெயரே அதுதானா ? இல்லை சினிமாவுக்கு வந்த பின் வைத்துக் கொண்டாரா என்பதைவிட தேவயானி கிடைக்கும்போது அவர் உண்மையானவை ராஜகுமாரன் ஆகிவிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. நிழற்குடை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட பட குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்” என்று பேசினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,
“இது நம்முடைய குடும்ப நிகழ்வு போல தான். நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பணம் வருகிறதே என்பதற்காக எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ஒருபோதும் அவருக்கு கெடுத்துக் கொண்டதில்லை. அந்த நற்பெயர் தான் 30 வருடம் கழித்தும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு காரணம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாதே. தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஒரு நல்ல வெற்றிப்படம் தரவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது. தம்பி படத்துக்கு அடுத்தபடியாக பகலவன் என்கிற படத்தை அவருக்காக எடுக்க இருந்தேன். ஆனால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் தம்பி படத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் ஆனால் அதன்பிறகு தான் வாழ்த்துக்கள் படத்தை அவருக்காக இயங்கினேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. இந்த இடத்தில் சொல்கிறேன், என்றைக்காவது ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட இழப்பை நான் சரி செய்வேன்.. கே.எஸ் அதியமான் போன்ற இயக்குனர்கள் இப்போது ரொம்ப குறைவு. தாலியை கழற்றி எறிந்து விட்டு இன்னொரு நபருடன் புரட்சி திருமணம் செய்யும்படி கதை எழுதியவரும் பாக்கியராஜ் தான்.. அதே தாலியை கழட்ட மாட்டார்கள் அதுதான் கலாச்சாரம் என்று ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி படமாக்கியவர் நம் பாக்யராஜ் காரணம். அவரது எழுத்தின் வன்மை அப்படி.எளிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பப்பாங்கான படமாக கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என்றால் அது அவரால் மட்டும் தான் முடியும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போல பாக்கியராஜ் நம் திரை உலகில் ஒரு மைல் கல். அவர் நம் கூட இருக்கிறார் என்பதை பெருமை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குருதேவ் அற்புதமாக காட்சிகளை படமாக்கி உள்ளார் என்பது தெரிகிறது. அடிதடி ஆக்சன் படங்களுக்கு இசையமைப்பதை விட இப்படி மென்மையான உணர்வுகளை கடத்தும் படத்திற்கு இசையமைப்பது ஒரு சவால். அதிலும் மனதில் நிற்பது போல மென்மையான இசையால் வருடுவது என்பது மிகக் கடினம். அதை இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் அழகாக செய்துள்ளார்.
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெண் பாடலாசிரியர் பாடல் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது. பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும்.சிவா ஆறுமுகம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் என்ன நடந்தாலும் கூட சினிமாவை விட்டு அவர் வெளியேறவில்லை. அவரது மகனும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துவங்குவது எல்லோருக்கும் எளிது தான். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.
ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயர்த்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. நிழற்குடை படத்திலிருந்து திரையரங்கின் தொடக்க காட்சிக்கு மக்களை அழைத்து வருவதற்கு அவரே போதும்” என்று கூறினார்.