‘குருமூர்த்தி’ பட இசை & டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘குருமூர்த்தி’ பட இசை & டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை எஸ்.என்.பாசில் கவனித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி, ராம்கி, பூனம் பஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சத்யதேவ் பேசும்போது, ‘’இந்த படம் எனக்கு ஒரு மறு பிறவி என்று சொல்லலாம். இந்தப் படத்திற்காக தான் நான் நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

நடன இயக்குநர் ராதிகா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் நான்கு பாடல்களும் வெவ்வேறு ஜானர்களில் நடனம் அமைப்பதற்குச் சவால் விடும் பாடல்களாக அமைந்திருந்தன. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் என்னை வேலைவாங்க வேண்டும் என்பதற்காகவே பிளான் பண்ணி இசையமைத்தது போல பாடல்களுக்கு சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மூன்று பெண்களுடன் சேர்ந்து என்னை ஆட வைத்து விட்டாயே என்று ராம்கி செல்லமாகப் புலம்புவார். அதேபோல நடிகர் நட்டி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய படங்களில் நான் மாஸ்டராக வேலை பார்த்திருந்தாலும் முதன்முறையாக அவரை ஆட்டிப்படைக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் கிடைத்தது” என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் கூறும்போது, “இயக்குநர் தனசேகரன் என்னுடன் சென்னை-28, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவுக் துறையில் இணைந்து பணியாற்றினார். ஆனாலும் அவருக்குள் இயக்குநராகும் கனவு இருந்துகொண்டே இருந்தது. பொதுவாகவே ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் டைரக்சன் ஆசை உள்மனதில் இருக்கும். ஒளிப்பதிவாளராக இருக்கும் நட்டி நட்ராஜ் கூட அவருக்குள் இருக்கும் நடிகராகும் ஆசையால் தான் மிகப்பெரிய வாய்ப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு இங்கே நடிகராக வந்து சாதித்துள்ளார்” என்று கூறினார்.

இயக்குநர் கே.பி.தனசேகரன் பேசும்போது, “ இயக்குநராக இது எனக்கு முதல் படம். புது இயக்குநர் தானே என நினைக்காமல் படத்தின் தயாரிப்பாளர் இந்தப் படத்தை பெரிய படமாகக் கொண்டு வருவதற்கு எனக்கு ஊக்கமளித்தார். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் தேவராஜ், புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள சத்யதேவ் நிச்சயம் நல்ல இடத்திற்கு வருவார்” என்று கூறினார்.

நடிகர் ரவிமரியா பேசும்போது, ‘ “இந்தப் படத்தின் ‘குருமூர்த்தி’ என்கிற டைட்டிலே படத்திற்குப் பலம் தான். புதிதாகப் படம் தயாரிக்க வரும் தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லியே படம் எடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் இங்கே ஒரு புரொடக்சன் மேனேஜரே தயாரிப்பாளராக வந்துள்ளதால் இந்தப் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை எந்த ஒரு பிரச்சினைக்கும் இடமே ஏற்படவில்லை. நான் நடிகராக மாறியதும் டைரக்சனை அப்படியே தள்ளிவைத்துவிட்டுத் தான் வந்தேன். அதேபோல இந்த படத்தின் இயக்குநர் ஒளிப்பதிவு அல்லது டைரக்சன் என ஏதோ ஒன்றில் கவனம் செலுத்திப் பயணிக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன்பு நட்டியை ஹீரோவாக வைத்து மிளகா என்கிற படத்தை இயக்கினேன். ஆனால் இப்போதுதான் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். கதாநாயகிகள் அனைவரும் இந்த விழாவில் ஒற்றுமையாக கலந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மிளகா படத்தில் உதவி எடிட்டராக பணியாற்றிய பாசில் தான் இந்த படத்திற்கு எடிட்டராகப் பணியாற்றி உள்ளார். அப்போதே அவர் பெரிய இடத்திற்கு வருவார் என கூறினேன்’’என்றார்.

நடிகை பூனம் பஜ்வா பேசும்போது, “இந்த படத்தின் தமிழரசி என்கிற அருமையான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்குக் கொடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் நட்டியுடன் இணைந்து நடித்தது போன்று எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அந்த அளவுக்கு பழகுவதற்கும், இணைந்து நடிப்பதற்கு நல்ல மனிதர்” என்றார்

பாடலாசிரியர் வெள்ளத்துரை பேசும்போது, “ஜல்லிக்கட்டுக்காக நான் எழுதிய ஒரு பாடலை கேட்டுவிட்டுத் தான் இந்த படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நான் எழுதிய செக்கசெவந்த சுந்தரிகள் என்கிற பாடலுக்கு இந்த கதாநாயகிகள் ஆடியதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக மேட்ச் ஆகிவிட்டது நன்றாகத் தெரிகிறது” என்றார்

நடிகர் ராம்கி பேசும்போது, “கோவிட் நிலவிய காலகட்டத்தில் ஊட்டியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தாத பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு தான் அதற்கு முக்கியமான காரணம். படக்குழுவினரின் பாதுகாப்புக்காக, தினசரி பூஜை நடத்தும் அளவிற்கு நல்ல மனிதர். 25 வருடத்திற்கு முன் நான் நடித்த படங்களில் நட்டி உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். எல்லா இடங்களிலும் அவர் பெயரே கேட்கும். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அதேபோன்று எளிமையான மனிதராக இருக்கிறார். படத்தில் எங்கேயும் அவரது தலையீடு இல்லை. ஒரே நாளில் நடக்கும் கதை என்றாலும் அடுத்து என்ன நடக்கும், பணம் கிடைத்தால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை வைத்து விறுவிறுப்பாக இந்தப் படத்தை இயக்குநர் தனசேகரன் இயக்கி உள்ளார்” என்றார்.

நடிகர் நட்டி பேசும்போது,“ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்த படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம். இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா..? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டி விட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். ‘செக்கச்சிவந்த சுந்தரி’ பாடலில் ராம்கி மூன்று நடிகைகளுடன் நடனமாடியுள்ளார். அந்தப்பாடலில் எனக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டபோது உங்களுக்கு இதில் வேலை என்று இல்லை என ஒதுக்கி விட்டனர்” என்று ஜாலியாகப் பேசினார்.

error: Content is protected !!