தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு 99 ஆண்டுகள் குத்தைகைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 1970 டிச.18-ம் தேதி குதிரைக்கு கடிவாளம் போடும் விதமாக இந்த இடத்திற்கான வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார். வாடகை உயர்த்துவது குறித்த எந்த பிரிவும் 1946-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லை என்று ரேஸ்கிளப்,பதிலளித்தது. ரேஸ் கிளப்பின் இந்த பதிலில் திருப்தி அடையாத அரசு 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தக் கோரி ரேஸ் கிளப்பிற்கு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரேஸ் கிளப் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகையை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசுக்குச் சொந்தமான 160 ஏக்கர் நிலத்துக்குச் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொகையைக் கட்டத் தவறினால் மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அரசு நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு அதை முறையற்றது என்றோ, சட்டவிரோதமானது என்றோ கூற முடியாது எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஒரு சில பணக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடைபெறும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதி, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், சுதந்திரத்துக்கு முன் மேற்கொண்ட குத்தகையை அரசு மறு ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி, பொதுநலனை உறுதி செய்யும் வகையிலும், அரசு வருவாயை காக்கும் வகையிலும், தமிழகம் முழுவதும் அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!