ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷின் இரிடியம் மோசடி குறித்து முழு தகவல்!

ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷின்  இரிடியம் மோசடி குறித்து முழு தகவல்!

இரிடியம் மோசடி – கோடிக்கணக்கில் ஏமாந்த தொழிலதிபர்கள் என்ற செய்தியை அடிக்கடி வரும் சூழலில் இந்த அரிய வகை இரிடியம் என்ற பொருளை விற்று தருவதாக கூறி ரூ. 26 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறி நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் (33). இவர் நானே என்னுள் இல்லை என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து அவர் இசையமைப்பாளராக மாறினார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, அரவிந்த் சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2 ‘ உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் (68) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு அம்ரீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அரிய வகை இரிடியம் தங்களிடம் இருக்கிறது. அதை மலேஷியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ. 2.50 லட்சம் கோடிக்கு வாங்க தயாராகவுள்ளது. அதற்காக ரூ. 26.20 கோடி கடனாக தந்தால், இரிடியத்தை அந்நிறுவனத்திற்கு விற்க வசதியாக இருக்கும். லாபமாக கிடைக்கும் பணத்தில் வாங்கிய கடன் போக மீதி தொகையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அவர்களுடைய பேச்சை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு ரூ. 26.20 கோடியை கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் மலேஷிய நிறுவனத்திடம் இருந்து எந்த பணமும் வரவில்லை. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டு இருப்பது நெடுமாறனுக்கு தெரிகிறது. உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நெடுமாறம் புகாரளித்துள்ளார். இந்த விபரம் தெரியவந்ததை அடுத்து அம்ரீஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகளும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அவருடைய தாய் ஜெயசித்ரா மற்றும் மனைவி மட்டும் இருந்துள்ளனர். தொடர்ந்து அம்ரீஷ் மற்றும் கூட்டாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர்.

கடந்த 15-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள கிருஷ்ணாவில் இருக்கும் ஒரு வீட்டில் சினிமா இசை அமைக்கும் பணிக்காக அம்ரீஷ் அங்கு வந்துள்ளார். உடனடியாக தகவலறிந்த குற்றப்பிரிவு போலீசார், அங்கு சென்று அமரீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடைபெற்ற விசாரணையில் இரியடித்தை விற்று தருவதாக கூறி நெடுமாறனிடம் ரூ. 26.20 கோடி பணத்தை வாங்கியதாக அம்ரீஷ் ஒப்புக்கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த கூட்டாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அது சரி இரிடியம் என்றால் என்ன?

இரிடியம் என்ற தனி உலோகம் மிகவும் அரிதானது. வருடத்திற்கே மூன்று டன் தான் வெட்டி எடுக்கிறார்கள். 1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்டால் இந்த உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிக அளவிலான உஷ்ணத்தை தாங்கக்கூடிய உலோகம். இதன் உருகுநிலை 2466 ° செல்சியஸ் (39 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்கு சமம்) என்ற உயர்ந்த அளவில் இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. இரிடியம் இயற்கையில் பிளாட்டினம், அசுமியம் ஆகியவற்றுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இது அதிகம் அரிதான பொருட்களில் ஒன்று.

ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில உருண்டையின் மீது ஒரு பெரிய விண்கல் வந்து மோதியதாகவும் அந்த விண்கல்லில் இந்த இரிடியம் கூடுதலான விகிதத்தில் இருந்ததாகவும் கருதப்படுகின்றது. லத்தீன் மொழியில் இதற்கு வானவில் என்ற அர்த்தம் உண்டு.

எங்கு கிடைக்கிறது? அதன் தன்மை என்ன?

இந்த இரிடியம் எளிதாக பூமியில் கிடைப்பதில்லை. பிளாட்டினம் கிடைத்தாலும், அதில் 1000-ல் ஒரு பங்கு மட்டுமே இரிடியம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 டன்கள் மட்டுமே இரிடியம் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது. இதனால், கிடைப்பதற்கரிய இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் அமோக வரவேற்பு இருக்கிறது. தாமிர கனிமத்திலிருந்தும் இந்த இரிடியம் கிடைக்கிறது. பல நூறு ஆண்டுகள் பழைமையான தாமிரத்தில், இரிடியம் கலந்திருக்கிறது.

இவற்றை உருக்கும்போது, 361 டிகிரி பாரன்ஹீட்டுக்கு தாமிரம் பிரியும். அடுத்து 2,645 டிகிரி பாரன்ஹீட்டில் நிக்கல் பிரியும். மீதமிருப்பவை இரிடியம் மட்டுமே. இவ்வாறு உருக்கப்பட்டு, சேகரிக்கப்படும் இரிடியம், உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் முதல் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.

இதன் மதிப்பு எவ்வளவு? எதற்கு பயன்படுத்துகிறார்கள்?

ஒரு கிலோ இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கும் விலை சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல். இரிடியத்தை 4,471 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். அவ்வளவு கடினமான வெப்பத்தையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு. தொடக்கத்தில் பேனா முனைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது செயற்கைக் கோள்களின் வெளிப்புறத்தில் இந்த இரிடியம் கனிமம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக் இயந்திரங்கள், போர் விமானங்களின் என்ஜின் பாகங்களில் கலப்பது எனப் பல்வேறு பயன்பாடுகளுக்கு இரிடியம் பயன்படுகிறது.

இப்படி சக்தி இல்லாத அரிதான உலோகத்தை எப்படி மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள்?

அரிதான எந்த பொருளுக்கும் எப்போதும் கிராக்கி உண்டு. அதனுடன் மக்களின் நம்பிக்கையை இணைத்து ஆசையை தூண்டினால், அங்குதான் பிறக்கிறது இரிடியம் மோசடி. சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படம் ஒன்றில் இதை அழகாக கூறியிருப்பார்கள். மனிதன் ஆசையில் தான் மோசடி பேர்வழிகளே உருவாகிறார்கள். அரிதான இந்த உலோகத்துக்கு ஆன்மீக சாயம் பூசி பணம் படைத்தவர்களை, விஐபிக்களை மோசடி கும்பல் எளிதாக ஏமாற்றி விடுகிறது. எப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் பார்ப்போம்.

கோவிலின் கலசங்களுக்கு ஒருவித சக்தி இருப்பதாக அனைவரும் நம்புவர். கோபுரகலசத்தின் நீர் பாவங்களை போக்கும் நன்மை தரும், நோய் தீர்க்கும் என்றெல்லாம் நம்பிக்கை உண்டு. இது தவிர பண்டைய காலத்தில் கோவிலில் அமைக்கப்பட்ட கலசங்களில் இருடியம் தாமிரம் கலந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கலசங்களை குறிவைத்தும் மோசடி கும்பல் இயங்குகிறது. தமிழக கோயில்களில் திருடப்படும் கலசங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரிடியம் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதில் இருக்கும் இரிடியத்தின் சதவீதத்துக்கு ஏற்ப கலசத்துக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நம்பிக்கையை மோசடி பேர்வழிகள் பயன்படுத்தி காசு பார்க்கின்றனர்?

கோவிலில் ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும். இப்படிப்பட்ட சக்தி கொண்ட கலசத்தை லட்சக்கணக்கான வோல்டேஜ் சக்திக்கொண்ட இடி மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும்.

அப்போது அது இரிடியமாக மாறுகிறது.அப்படி மாறிய சக்தி மிக்க கலசத்தை, அல்லது அந்த தகட்டை வைத்திருக்கிறவர்கள் மிகப்பெரிய வசதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். நினைத்தது நடக்கும் என்ற எண்ணத்தையும் இரிடியம் வாங்கும் நபர்களின் மனதில் தோற்றுவிக்கின்றனர்.

இந்த மோசடி கும்பலின் இலக்கு ஆன்மீக நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய செல்வந்தர்களும், விஐபிக்களும், தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும்தான். இப்படிப்பட்டவர்களை அணுகும் கும்பல் சக்திவாய்ந்த இரிடியம் தகடு உள்ளது என்றும் வெளிநாடுகளில் பல கோடி மதிப்புள்ள இந்த தகட்டை குறைந்த விலைக்கு தருகிறோம் நீங்கள் வைத்திருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று ஆசைவார்த்தை கூறி சாதாரண தகட்டை விற்று விட்டு சென்று விடுவார்கள்.

சதுரங்க வேட்டை என்ற படத்தில் இந்த மோசடி பற்றி விரிவாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

ஆகவே இரிடியம் என்ற உலோகம் இருப்பதாக யாராவது விற்க வந்தால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் சாதாரண தகட்டுக்கு மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி எல்லாம் கிடையாது என்று அறிவியல் அறிஞர்கள் உரத்தக் குரலில் தெரிவித்துள்ளார்களாக்கும்

error: Content is protected !!