நடப்பு கணக்கு பற்றாக்குறையை மோசமாக்கும் வெளிநாட்டு செலவுகள்!
கடந்த 2022 – 2023 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களில் ரூ.80,000 கோடி வரை செலவிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது எந்த நிதியாண்டில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான செலவினம் எனவும் ஆர்.பி.ஐ. கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி 2022-ம் ஆண்டின் டிசம்பரில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.9,000 கோடியை செலவிட்டுள்ளனர். 2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை விடுமுறை நாட்களில் மட்டும் வெளிநாட்டு பயணங்களுக்கு இந்தியர்கள் ரூ.80,000 கோடி செலவு செய்துள்ளனர். கல்வி, உறவினர்களை பராமரித்தல், பரிசுகள் மற்றும் முதலீடுகளுக்காக செலவிடப்பட்ட அந்நிய செலாவிணி கணக்கின்படி நடப்பு நிதியாண்டில் இந்தியர்கள் ரூ.1.50 கோடி அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டின் அளவான ரூ.1.60 கோடிக்கு நெருக்கமான தொகையாகும்.
2018-ம் நிதியாண்டில் மொத்த மாதாந்திர சராசரியை விட கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்திய மக்கள் வெளிநாடுகளில் 2 மடங்கு அதிகம் செலவு செய்வதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2021-க்கு முன்பு வரை தொற்றுநோய் காரணமாக வெளிநாட்டு பயணங்கள் 25% குறைந்திருந்தது. ஆனால், கொரோனா தளர்வுகளை அடுத்து 2022 – 2023-ல் சர்வதேச செலவினங்கள் 51% அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களை பராமரிக்க இந்தியர்கள் செலவிடும் தொகை குறைந்துள்ளது. 2018-ல் 26% இருந்த பராமரிப்பு செலவுகள் நடப்பு நிதியாண்டில் 15% குறைந்துள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான செலவினங்களின் அதிகரிப்பை நகர்வு தேவையின் அடையாளமாக பொருளாதார வல்லுநர்கள் கருதினாலும் அதிகரித்து வரும் வெளிநாட்டு செலவுகள் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மோசமாக்கும் என்று தெரிவிக்கின்றனர்