32°C

நீண்ட இடைவெளிக்குப் பின் சிங்களர்கள் – தமிழர்கள் மத்தியில் நெருக்கம்!

admin Published: May 19, 2022 2 நிமிட வாசிப்பு Updated: May 21, 2022 Exclusive
எழுத்து:

க்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடரில் பங்கேற்றனர். மேலும் சிங்களர்கள் – தமிழர்கள் மத்தியில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக சேதிகள் வருகின்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, மக்கள் போராட்டம் வெடித்ததால், மகிந்த ராஜபக்சே கடந்த 9 ந்தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், உயிருக்கு பயந்து, மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே அவர்களது குடும்பத்தினரை திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் தஞ்சமைடைந்தனர். அதன்பின் புதிய பிரதமராக ரணில் பதவியேற்றார். பிரதமராக ரணில் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் அதிபர் கோத்தபய பதவி தப்பியது.

இந்நிலையில், கூட்டத்தின் 2ம் நாளான நேற்று எம்பிக்கள் என்ற முறையில் மகிந்த ராஜபக்சே, நமல் ராஜபக்சே இருவரும் நாடாளுமன்றத்திற்கு வந்தனர். நாடாளுமன்ற கூட்டத்தில், வீடுகள் எரிக்கப்பட்ட எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் தங்கக் கூட வீடு இல்லை என மகிந்த ராஜபக்சே புலம்பி கண்ணீர் வடித்தார். இதைக் கேட்ட பிரதமர் ரணில், 9ம் தேதி வன்முறையில் வீடு இழந்த எம்பிக்களுக்கு தற்காலிக வீடு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதே சமயம் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் இலங்கை முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் பலியான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் முறையாக இம்முறை, அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்த பெரும்பான்மையான சிங்களர்கள் போரில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்காக அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப்பிறகு சிங்களர்கள் – தமிழர்கள் மத்தியில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.