பஞ்சாப் : காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி! – ராகுல் காந்தி அறிவிப்பு
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்தந்தக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களின் முதல்வர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.
177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்தார். முன்னதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் என குழப்பம் நிலவிவந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆம் ஆத்மி மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் தனது முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதற்குக்கூட பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது என பல விமர்சனங்களை முன்வைத்து பரப்புரை கூட்டங்களை நடத்தின. இந்நிலையில் தற்போது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடத்திவரும் நிலையில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.
58 வயதாகும் சரண்ஜித் சிங் சன்னி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.சம்கவுர் சாஹிப் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில், மூன்று முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தொழில்நுட்ப கல்வி அமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி வகித்துள்ளார். 2015 – 2016 வரை, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சரண்ஜித் சிங் பதவி வகித்துள்ளார். கடந்த செப்.20- பஞ்சாப் முதல்வராகவும் இருந்த இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.