ஆவின் குடிநீர் வரப் போகுது!- எதிர்கட்சிகள் அதிருப்தி!!
ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் தொடங்க உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து த்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய அரசு அதையும் விற்பனைக்கு கொண்டு வந்ததோடு டாஸ்மாக்கிற்கு வைக்கும் இலக்கை போல குடிநீர் பாட்டிலுக்கு இலக்கு வைப்பதா என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற விவசாயிகளுக்கு இரண்டாவது வருமான ஆதாரமாக இருந்து வருபவை பால் பண்ணை. 2022-23 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஆவின் எதிர்கொண்டது. ஆவின் நிறுவனத்துடன் தொடர்புடைய பால் பண்ணையாளர்களில் ஒரு பகுதியினர் தங்களது உற்பத்திப் பொருட்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர்.
ஆவின் நிறுவனம் பசும்பாலினை லிட்டருக்கு ரூ.35-க்கும், எருமைப்பாலினை லிட்டருக்கு ரூ.44-க்கும் கொள்முதல் செய்யும் நிலையில், தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை கூடுதலாக வழங்குகின்றன. பசும்பால் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.55 செலவாகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கொள்முதல் விலையினை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலும் குறைந்துள்ளது.
இதற்கு மத்தியில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ஆவடி நாசர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். ஆவின் நிறுவனத்தினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய திட்டங்கள், முன்னெடுப்புகள் விரைவில் தொடங்கும் என அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தான் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர். ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள், ஐஸ்கீரிம் போன்றவை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த தண்ணீர் பாட்டில் திட்டமும் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவரும் என பால்வளத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அரை லிட்டர் (500 ml) முதல் ஒரு லிட்டர் (1 L) வரையிலான குடிநீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது ஆவின் நிறுவனம். மேலும், நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யவும் ஆவின் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்தாண்டு தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உயிர் ஆதாரமான சுத்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய அரசு அதையும் விற்பனைக்கு கொண்டு வந்ததோடு டாஸ்மாக்கிற்கு வைக்கும் இலக்கை போல குடிநீர் பாட்டிலுக்கு இலக்கு வைப்பதா என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதனை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை, ஆவின் நிறுவனத்தின் மூலமாகக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2014-2015ஆம் ஆண்டு, குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவித்த போது, அதனை இலவசமாக வழங்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசே விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் குடிநீர் விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருப்பது, திமுகவினர் பலன் பெறுவதற்காகவோ, என்ற சந்தேகம் எழுகிறது.
குடிநீருக்கு வரி செலுத்தி வரும் பொதுமக்கள், சரியான முறையில் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதியுறும்போது, அதற்குத் தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? உடனடியாக, அனைத்து மக்களுக்கும் சரியான, சுத்தமான குடி நீர் வினியோகத்தை உறுதி செய்யும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.