செய்தியைக் கேட்க / Listen to News
முன்பெல்லாம் தலைமுறை தலைமுறையாகச் சொத்துகளையும் கோடிக்கணக்கான முதலீடுகளையும் சேர்த்து வைத்துவிட்டால், வாரிசுகளின் எதிர்காலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுவிடும் என்ற அசைக்க முடியாத பிம்பம் இருந்தது. எவ்வளவு பெரிய பொருளாதாரச் சரிவு ஏற்பட்டாலும், தங்களின் பின்னால் இருக்கும் பலத்த பணப் பலம் பிள்ளைகளைக் காப்பாற்றிவிடும் என்றே பெரும் பணக்காரர்கள் நம்பினர். ஆனால், தற்போதைய நவீன பொருளாதாரச் சூழலில் உலகின் முன்னணிப் கோடீஸ்வரர்களும்கூடத் தங்களது ஜென் இசட் (Gen Z) வாரிசுகளின் எதிர்காலம் குறித்துக் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் மூழ்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சி, சுருங்கி வரும் ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகள் மற்றும் கார்ப்பரேட் உலகில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை கோடீஸ்வரக் குடும்பங்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. பணம் மட்டுமே ஒரு மனிதனுக்கு முழுமையான பாதுகாப்பையும் நிலையான எதிர்காலத்தையும் வாங்கித் தந்துவிடாது என்பதை அவர்கள் இப்போது கண்கூடாக உணரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க உலகப் பணக்காரர்கள் தற்போது மேற்கொண்டு வரும் புதிய முன்னெடுப்புகள் உலக அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.
AI தாக்கமும் ஆரம்ப நிலை வேலைகளின் அழிவும்
தொழில்நுட்பம், சட்டம், நிதி மேலாண்மை மற்றும் சுகாதாரம் போன்ற ஒரு காலத்தில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட உயர் துறை வேலைகளில் கூட இன்றைய இளைய தலைமுறையினர் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியால், ஒரு நிறுவனத்தில் ஜூனியர் லெவல் ஊழியர்கள் செய்ய வேண்டிய பல ஆரம்ப நிலை வேலைகள் (Entry-level roles) இப்போது முற்றிலுமாக இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டன. அதாவது, பெரிய நிறுவனங்களின் படியை மிதிக்கும் தொடக்க நிலை வாய்ப்புகளே தற்போது காணாமல் போய்விட்டன. இதனால் கோடீஸ்வரப் பெற்றோர்களின் வாரிசுகளுக்குத் தேவையான முறையான அனுபவத்தைப் பெற்றுத் தரும் தொடக்கப் புள்ளிகளே இல்லாமல் போவது அவர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.

பணத்தைத் தாண்டிய மனிதத் திறன்களின் அவசியம்
எவ்வளவு பெரிய சொத்துச் சுகங்கள் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டங்கள் இருந்தாலும், இன்றைய போட்டி நிறைந்த செயற்கை நுண்ணறிவு உலகில் அது மட்டுமே நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யாது. ஏஐ இயந்திரங்களால் ஒருபோதும் மாற்ற முடியாத மனிதத் திறன்களான நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் மனத்திடம் (Resilience), புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை உடனடியாக மாற்றிக் கொள்ளும் திறன் (Adaptability) மற்றும் சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கை போன்ற மென்திறன்களே (Soft skills) இளம் தலைமுறைக்கு நீண்ட கால வெற்றிக்கு உதவும் என்று செல்வ மேலாண்மை ஆலோசகர்கள் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். புத்தக அறிவுக்கும் கார்ப்பரேட் உலக யதார்த்துக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்தப் புதிய திறன்களே நிரப்ப முடியும்.
மாறிவரும் வாரிசுரிமை மற்றும் ஆதரவு வியூகங்கள்
இந்தச் சவால்களை எதிர்கொள்ளச் செல்வந்த குடும்பங்கள் தங்கள் வாரிசுகளுக்குச் சொத்துகளைச் சேர்ப்பது மற்றும் மாற்றுவது குறித்த காலங்காலமான திட்டங்களை முழுமையாக மாற்றி அமைத்து வருகின்றன. வாரிசுகள் தங்களது சொந்தக் காலில் நிற்கவும், சுயமாக முடிவெடுக்கும் திறனைப் (Agency) பெறவும் உதவும் வகையில் நிதி உதவிகளை ஒரே நேரத்தில் வாரிக் வழங்குவதற்குப் பதிலாக, சரியான காலக்கட்டத்தில் வழங்கும் புதிய முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். எல்லாவற்றையும் பெற்றோர்களே செய்து கொடுத்துக் குழந்தைகளை முடக்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கு நிஜ உலகச் சவால்களை எதிர்கொள்ளும் கடினமான வாய்ப்புகளைத் தாமாகவே கடந்து வர வழிவகுக்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்காலத்திற்கான தெளிவான சமிக்ஞை
பணத்தின் மீதான முழுமையான நம்பிக்கையைக் கைவிட்டு, அனுபவ ரீதியான பாதுகாப்பிற்கு கோடீஸ்வரர்கள் மாறி வருவது உலகளாவிய சமூகத்திற்கு ஒரு முக்கியமான மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறையை ஆடம்பரத்தில் திளைக்க வைப்பதை விட, துணிச்சலோடும் நிஜ உலக யதார்த்தங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தோடும் வளர்ப்பது மட்டுமே உண்மையான பாதுகாப்பைத் தரும் என்ற புதிய நிதர்சனத்திற்கு உலகப் பணக்காரர்கள் பழகி வருகின்றனர். செல்வத்தை விடச் சுயசார்பே இன்றைய தலைமுறையின் உண்மையான பலம் என்பதை இந்தப் புதிய சிந்தனை மாற்றம் அடித்துச் சொல்கிறது.
நிலவளம் ரெங்கராஜன்
