ஸ்கூலைக் கட் அடித்து விட்டு களேபரம் செய்த பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை!

ஸ்கூலைக் கட் அடித்து விட்டு களேபரம் செய்த பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை!

டீன்ஏஜ்’ பருவத்தில் பள்ளி, கல்லூரிக்கு பயணிக்கும் மாணவ-மாணவிகள் சில நேரங்களில் காதல் வலையில் வீழ்ந்து போகிறார்கள். வேறு சிலர் தகாத நட்பு வட்டாரங்களால் போதை பழக்கத்தில் மூழ்கிவிடுவதும் உண்டு. எனினும் மாணவர்களை செம்மைப்படுத்துவது பள்ளிப் பருவம் தான். சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மாண வர்களின் மனதில் வன்முறை புகுந்து இருப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் சரியான முறையில் நீதிபோதனைகள், விளையாட்டுகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் கள் பாடங்களை கற்பிப்பதோடு, பழங்கால நீதிகதைகளை எடுத்துரைப்பார்கள். விளையாட் டுக்கு என்று ஒதுக்கப்படும் நேரத்தில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடி நட்பு பாராட்டி னார்கள். ஆனால் இன்று அந்த விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் நேரம், மற்ற பாடங்களின் ஆசிரியர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்நிலையில் நெல்லை பாளையங் கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களை யும்  எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர்.  

பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதை அடுத்து, மோதலில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுடன் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் செய்த தவறுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்று பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லை நாகராசன் தண்டனை வழங்கினார். இதனையடுத்து மாணவர்கள் காவல் நிலையத்தின் முன்பு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்த படி 1330 குறள்களையும் எழுதினர்.

திருக்குறளை எழுதி முடித்த மாணவர்களை அழைத்துக் கண்டித்த போலீசார், அவர்களது பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதை அடுத்து மாணவர்கள் திருக்குறள் எழுதிய காகிதத்தில் காவல் நிலைய முத்திரையைப் பதித்து பள்ளிக்கு கொண்டு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்களை திருத்துவதற்காக அவர்களுக்கு போலீசார் வழங்கிய தண்டனையை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.