சர்வதேச அளவில் ரூ.1000 கோடி வசூல் – ’பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நன்றி

சர்வதேச அளவில் ரூ.1000 கோடி வசூல் – ’பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நன்றி

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது. 6 நாட்களில் ரூ.750 கோடி வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தியது.

prabhas may 7

இப்போது கடந்த 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம் முதல் முறையாக ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை தனதாக்கி உள்ளது. இந்தியாவில் ரூ.800 கோடியும், வெளிநாடுகளில் ரூ.200 கோடியும் வசூல் செய்து உள்ளது. பாகுபலி 2 திரைப்படம் இந்தியில் 7 நாட்களில் ரூ. 245 கோடி வசூல் செய்து உள்ளது.

இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது. உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி-2 படத்தை சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜப்பானில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது, மேலும் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1000 கோடி வசூலை எட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாகுபலி திரைப்பட குழுவிற்கு ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாகுபலி நாயகன் பிராபாஸ் வெளியிட்ட நன்றி அறிவிக்கையில், “எனது இதயத்தில் வாழும் எனதருமை ரசிகர்களுக்கு, நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நினைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். என்னுடைய பாகுபலி பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் SS. ராஜமௌலி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இத்தருணத்தில் பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்”என்று தெரிவித்துள்ளார்