ஹிந்திக்கு ஆதரவான சுற்றறிக்கை வாபஸ் பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு
தமிழக அரசியல் கட்சிகள் மற்ரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஹிந்தி பாடத்துக்கு ஆதரவான சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் முதன்மை பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற முந்தைய சுற்றறிக்கை, கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது என்றும் பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அனுப்பிய ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில், இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தும் படியும், சட்டம மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும் யு.ஜி.சி. கூறியுள்ளது.இதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். யு.ஜி.சி.யின் உத்தரவு, தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்றும்,இந்தியை திணிக்கும் முயற்சியை முறியடிப்போம் என்றும் அவர் கூறினார்.அதுபோல், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் வேத பிரகாஷ் கூறியதாவது:–ஆங்கிலத்துடன் இந்தியும் முதன்மை பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற முந்தைய சுற்றறிக்கை, கவனக்குறைவாக வெளியிடப்பட்டு விட்டது. எனவே, ‘இந்தி, கட்டாயம் அல்ல‘ என்ற புதிய சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிட பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது.எப்படி கற்பிப்பது, யார் கற்பிப்பது, என்ன கற்பிப்பது என்பதை முடிவு செய்வது அந்தந்த பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட உரிமை ஆகும்.என்று அவர் கூறினார்.


