மதுரை: கவர்மெண்ட் பஸ் விபத்தில் 17 பேர் பலி: நிவாரண உதவி + அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லையில் இருந்து குமுளி சென்ற அரசுப் பேருந்தும் சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் பலியாகினர்.அரசுப் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், சிலர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.தீயணைப்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

”உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செய்ய மதுரை மருத்துவமனையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
காயமடைந்த 12 பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 19 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் வைரமுத்துராஜ் தெரிவித்துள்ளார்
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து விபரம் அறியும் வகையில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.திருமங்கம் தாசில்தார் 94450-00591,94450-00592, மதுரையில் சிகிச்சை பெறுவோர் குறித்த அறிய -94450-00586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


