நாட்டின் முதல் அஞ்சலக ஏ.டி.எம் :சென்னையில் தொடங்கியது
இந்தியாவின் முதலாவது அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னையில் திறக்கப்பட்டது. தியாகராயர் நகரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் மையங்களில் ஐ.டி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளதால் தகவல் தொழில்நுட்ப வசதிக்காக ரூ.4 ஆயிரத்து 909 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அஞ்சலகத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், தனது வருவாயை அதிகரிக்க அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியால், வங்கி சேவையின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தனியார் துறையில் புதிய வங்கி உரிமம் வழங்க உள்ளதாக மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது. அப்போது, அஞ்சல் துறையும் வங்கி சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் வங்கி கிளை துவக்க முடிவு செய்தது.
கடந்த 2012 – 13ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட் உள்ளது. இது பொதுத்துறையை சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள டெபாசிட் டில் 50 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள டெபாசிட்டை விட இரண்டு மடங்கு அதிகம். மேலும், வங்கி சார்ந்த சேவைகளான தொலைபேசி, மின்சார கட்டணம் வசூலிப்பதிலும் அஞ்சல்துறை ஈடுபட்டுள்ளது. எனவே, வங்கி வர்த்தகத்தில் இந்திய அஞ்சல் துறை களம் இறங்குவதால், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் வங்கி சேவை எளிதாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வர்த்தக ரீதியாக வங்கிகளை துவக்குவதற்கு அஞ்சல் துறை விண்ணப்பத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்காத நிலையில், தன்னிடம் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் வசதியை ஏற்படுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.
வங்கி கிளைகள் இல்லாத கிராமங்களிலும் அஞ்சலக கிளைகள் உள்ளன. இதனால், வங்கி துறையில் ஈடுபடுவது அஞ்சல் துறை க்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் முதலாவது அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னையில் திறக்கப்பட்டது. தியாகராயர் நகரில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது


