எல்லா வங்கிகளிலும் ஏடிஎம் மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி!

எல்லா வங்கிகளிலும்  ஏடிஎம் மூலமாக பணம் டெபாசிட் செய்யும் வசதி!

ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில் இவை குறைவு. இதனால், பணம் டெபாசிட் செய்ய வங்கிக்கு செல்லவேண்டிய அவசியம் இன்னமும் உள்ளது. பணத்தை டெபிட்கார்டு பயன்படுத்தி எந்த வங்கி ஏடிஎம்மிலும் எடுக்கலாம். ஆனால், டெபாசிட் செய்வது கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இந்த நிலையை போக்கி, அனைத்து வங்கி ஏடிஎம் மூலமாகவும் பணம் டெபாசிட் செய்யும் வசதியை கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. நேஷனல் பைனான்ஸ் சுவிட்ச் (என்எப்எஸ்) மூலம் அனைத்து வங்கிகளின் பணம் டெபாசிட் இயந்திரங்களையும் ஒருங்கிணைத்து இதை சாத்தியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
atm19
இதுகுறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்.ஆர்.கான் கூறுகையில், ‘‘தேசிய பண பட்டுவாடா நிறுவனம் (என்பிசிஐ), நேஷனல் பைனான்ஸ் சுவிட்ச் (என்எப்எஸ்) என்ற திட்டத்தை செயல்படுத்துவது பற்றி பரிந்துரை செய்துள்ளது. அதாவது, என்எப்எஸ் உடன் அனைத்து வங்கிகளையும் இணைக்கும் பட்சத்தில் இதை செயல்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. இதன்மூலம் எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும், மற்றொரு வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் தனது வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும்’’ என்றார்.

பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அந்த வங்கிக்கு, வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே இதற்கு காரணம். இந்த கட்டணம் குறைக்கப்படுமா என்று கேட்டதற்கு எச்.ஆர்.கான் கூறுகையில், ‘‘ஒரு தொழில்நுட்பம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும்போது அதற்கான செலவை மீட்காவிட்டால், மாற்று வழியை அல்லது வசதியை அளிக்க முடியாமல் போய்விடும்’’ என்றார்.

Related Posts