அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம் – ஜுலை 1-க்குள் அமைக்க உத்தரவு!

அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம் – ஜுலை 1-க்குள் அமைக்க உத்தரவு!

வங்கி ஏடிஎம்களை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி விசைப்பலகை உடையதாகவும், பதிவு செய்யப்பட்ட குரல் வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. பழைய ஏடிஎம் இயந்திரங்களில் படிப்படியாக மாற்றுவதோடு, புதிதாக வைக்கப்படும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த வசதி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்றில் ஒரு ஏடிஎம் இந்த வசதியுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ஜூலை 1ம் தேதிக்கு முன்னதாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது.
ATM_talk
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்”அனைத்து ஏடிஎம்களிலும் குரல் வழிகாட்டி, பிரெய்லி விசைப்பலகை வசதி ஏற்படுத்துவது பற்றி வங்கிகள் திட்டம் வகுக்க வேண்டும். க்கர நாற்காலிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் உயரத்தையும் கவனத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும். அவர்களுக்காக சாய்தள பாதை அமைக்க வேண்டும். பார்வை குறைபாடுகள் உடையவர்களுக்காக வங்கி கிளைகளில் லென்ஸ் கண்ணாடிகளை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

இந்த லென்ஸ் கண்ணாடிகள் (பூதக்கண்ணாடி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் வங்கியில் எந்த இடத்தில் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைவரின் பார்வையும் படும் இடத்தில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். வங்கிகள் இந்த வசதிகளை எந்த அளவுக்கு செயல்படுத்தியுள்ளன என்பது பற்றி வாடிக்கையாளர் சேவை குழுவிடம் அவ்வப்போது விவரம் அளிக்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.