பெண்மையின் வேர் அறுக்கப்படும் ‘பெண் சுன்னத்’: 3000 ஆண்டுகால ரத்தச் சரித்திரம்!
அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் புத்தாடை அணிந்து வந்து கொண்டிருந்தார்கள். மங்கல இசையும், விருந்துக்கான வாசமும் அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தது. ஐந்து வயது சிறுமி ஒருத்தி, தனக்கு நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் அந்த முற்றத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு இன்று ‘புனிதச் சடங்கு’. ஆனால், அது புனிதமல்ல; அவளது வாழ்நாள் முழுமைக்குமான உணர்ச்சிகளையும், உடல் ஆரோக்கியத்தையும் பலிவாங்கப் போகும் ‘பெண்ணுறுப்புச் சிதைவு’. அந்தச் சமூகம் கொண்டாடும் இந்தச் சடங்கு, உண்மையில் ஒரு பிஞ்சுயிரின் உடலைச் சிதைக்கும் கொடூரம்.

எதற்கு இந்த வன்கொடுமை?
பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் அவளுக்கான உணர்ச்சிக் கூறுகளின் மையம். இதை அறுத்துவிட்டால் அந்தப் பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும், அவள் ‘தூய்மையானவளாக’ இருப்பாள் என்ற பிற்போக்குத்தனமான கருத்தே இதற்கு அடிப்படை. ஐந்து முதல் ஏழு வயதிற்குள் இந்தச் சடங்கை முடித்துவிட்டு, தன் மகள் ‘சுத்தமாகிவிட்டாள்’ என்று அந்தத் தாயே பெருமை பேசும் அவலம் இன்றும் தொடர்கிறது.
மருத்துவமற்ற ‘ஆபரேஷன்’
அறுப்பது என்றால் ஏதோ மருத்துவமனையில் நடப்பதல்ல. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமியை ஆசைகாட்டி அழைத்து, இருட்டு அறைக்குள் தள்ளி, அவளது கதறலோடு இந்த பாதகச் செயல் நடக்கிறது:
-
ஆயுதம்: கிருமி நீக்கம் செய்யப்படாத வெறும் சவரப் பிளேடு.
-
படிநிலைகள்: முதலில் க்ளிட்டோரியஸ் அறுத்து எறியப்படுகிறது. பின் ‘லேபியா பிளாஸ்டர்’ எனப்படும் இதழ் போன்ற பகுதி நீக்கப்பட்டு, இறுதியில் ஒரு சிறு துளை மட்டும் விட்டு துணி தைக்கும் நூலால் பெண்ணுறுப்பு தைக்கப்படுகிறது (வெஜைனா பிளாஸ்டி).
-
யார் செய்கிறார்கள்?: ஒரு தகுதியான மருத்துவர் கூட அல்ல; அந்த ஊர் ‘பெரிசுகள்’ அல்லது அந்தச் சிறுமியின் தாய்தான் இதைச் செய்கின்றனர்.
வலிகளின் நாற்பது நாட்கள்
சடங்கு முடிந்த பின், கால்களை அசைக்க முடியாதபடி கட்டிப் போட்டு விடுவார்கள். 40 நாட்கள் கழித்தே புண் ஆறும். அந்த ரத்தக் கறையைக் கழுவிவிட்டு, புனிதச் சடங்கு முடிந்த உற்சாகத்தில் ஊருக்கே விருந்து வைப்பார்கள். தைக்கப்பட்ட நூலை அந்தப் பெண் திருமணம் செய்த பின் அவளது கணவன் அறுத்தால்தான் அவள் கன்னித்தன்மை உடையவள் என்று சான்று வழங்கப்படுகிறது.

3000 ஆண்டுகால மூடநம்பிக்கை
இது இன்று நேற்றல்ல, பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற 28 ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் 98% பெண்களுக்கு இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைச் செய்யாத பெண்கள் ‘தீட்டு உடையவர்களாக’க் கருதி ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
ஐ.நா சபையின் அதிர்ச்சித் தகவல்
-
உலகில் 20 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்தகைய சிதைவுக்கு ஆளாகியுள்ளனர்.
-
தினந்தோறும் 6,000 பெண்களுக்கு இது நிகழ்த்தப்படுகிறது.
-
ஐ.நா கணக்குப்படி, 15 பெண்களில் ஒரு பெண் பிறப்புறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
-
சமூக மாற்றத்தால் எகிப்து, உகாண்டா போன்ற நாடுகளில் தடை வந்தாலும், பழங்குடியினரிடையே இது இன்னும் ரகசியமாகத் தொடர்கிறது.
துடைத்தெறி:
பெண் கல்வியும், சமூக மாற்றமும் மட்டுமே இத்தகைய இருண்ட காலப் பழக்கங்களை வேரறுக்க முடியும். பெண்மையைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு சிறுமியின் உடலையும் மனதையும் சிதைப்பது புனிதமல்ல; அது மனித குலத்தின் மீதான வடு.பெண்கள் நாடாளும் சக்தியாக உருவாகி வரும் இன்றைய காலத்திலும், 250 மில்லியன் பெண்கள் இத்தகைய பாதிப்போடு வாழ்ந்து வருவது வேதனையான முரண். ஒரு சிறுமி பெண்ணாக உருவெடுக்கும் முன்பே அவளது உரிமைகளைச் சிதைக்கும் இந்த ‘பெண் சுன்னத்’ முறை, உலக வரைபடத்திலிருந்து முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டும்.
டாக்டர்.ரமாபிரபா


