உலக காண்டாமிருகங்கள் தினமின்று!
கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா ஆகிய ஐந்துவகை காண்டாமிருகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் தந்தத்துக்கு நிகரான விலை கிடைப்பதால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் அவற்றின் இனம் அழியும் நிலையில் உள்ளது. நகரமயமாக்கல் என்ற ஒற்றை வரியில் இன்று காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிவதால் இடம்பெயரும் வன விலங்களை, வேட்டைக் கும்பல் வேட்டையாடுவதால் வருங்கால சமுதாயத்தினர் இன்றுள்ள வன விலங்குகளை வெறும் சித்திர மாகவே பார்க்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள காண்டாமிருகம் தற்போது அழியும் நிலையில் உள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது பூமியில் வாழும் வன விலங்குகளில் பல தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. அதற்கு காரணம் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படுவதும் மற்றும் அவை வேட்டையாடப்படுவதும் ஆகும். அந்த வகையில் தந்தங்களுக்காக யானைகளும், தோல், பற்கள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக புலிகளும், சிங்கங்களும் வேட்டையாடப்படுகின்றன. அதேபோல உலகின் தனித்துவமான உயிரினமாக கருதப்படும் காண்டாமிருகங்களும் அதன் கொம்புகளுக்காக வேட்டையாடப் படுகின்றன. அதிலும் தந்தத்தைவிட விலை மதிப்புமிக்க பொருளாகக் கண்டாமிருகக் கொம்புகள் உலகச் சந்தைகளில் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், கொம்பில் கெராட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் மருத்துவப் பயன்பாடு உள்ளது என்ற மூடநம்பிக்கையால் கொம்புக்காக காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள வியட்நாம், காண்டாமிருக கொம்புக்கான வியாபார மையமாக விளங்குகிறது. இத்தனைக்கும் காண்டா மிருகத்தின் உயிர் அதன் கொம்பில்தான் உள்ளது. காண்டாமிருகங்கள் அபார செவிப்புலனும், மோப்பசக்தியும் கொண்டவை. காண்டாமிருகம் எந்த உயிரினத்தையும் கொன்று உயிர் வாழவில்லை. இலைகள், புல் போன்றவைதான் இவற்றின் உணவு.
இந்த இனத்தை காப்பாற்ற நாம் எதுவும் செய்யாவிட்டால் காடுகளில் வாழும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக இவை கருதப்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காண்டாமிருகங்களைப் பற்றி மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்த அற்புதமான உயிரினங்களில் எஞ்சியிருப்பதைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
யானையைப்போல் காண்டா மிருகம் பெரிய விலங்கு. இது 2 டன் முதல் 4 டன் எடை கொண்டது. காண்டாமிருகத்தின் தோல் யானையைவிட மிகவும் தடித்ததாகக் காணப்படும். இதன் தோல் தடிமன் 1.5 முதல் 5 செ.மீ. வரை உள்ளது. இவ்வளவு பெரிய உருவம்கொண்ட இந்த விலங்கின் மூளை சிறியது. இதன் மூளை 400 முதல் 600 கிராம் வரை மட்டுமே இருக்கும். வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல கண்டங்களில் காணப்பட்ட காண்டாமிருகங்கள் இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவாழ் மிருகங்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் வந்துவிட்டன.
இன்றைய உலகில் 5 வகை காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. இதில் வெள்ளை இனம், கருப்பு இனம் ஆகிய இரு வகைகள் ஆப்பிரிக்க நாட்டில் உள்ளன. சுமித்திரன் இனம், இந்தியன் இனம், ஜாவன் இன வகை காண்டாமிருகங்கள் தெற்கு ஆசியக் காடுகளில் உள்ளன. ஆப்பிரிக்காவின் வெள்ளை, கருப்பு மற்றும் சுமித்திரன் இன காண்டாமிருகங்கள் இரு கொம்புகளை கொண்டவை. இந்திய இனம், ஜாவன் இனம் காண்டாமிருகங்கள் ஒரு கொம்பை மட்டுமே கொண்டுள்ளன. இந்தியன் இனமானது ஒற்றை கொம்பு காண்டாமிருகம் என்றே அழைக்கப்படுகிறது. காண்டா மிருகத்தின் கொம்பின் நீளம் 10 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை காணப்படுகிறது.
இந்தியாவில் தற்போது அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்தியன் இனம் காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில எண்ணிக்கையில் உள்ளன. உலகத்தில் உள்ள இந்தியன் இனம் காண்டாமிருகங்கள் மூன்றில் இரண்டு பங்கு அசாம் மாநிலத்தில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் மட்டுமே உள்ளன. ஜாவன் இனம், உலகில் சுமார் 60 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.
1930-ம் ஆண்டுகளில் இந்த இனம் இந்தியாவில் நேபாளம், பர்மா, மலேசியா மற்றும் வியட்நாமில் அதிகளவு காணப்பட்டது. கொம்புக் காக இந்த இனம் அதிகளவு வேட்டையாடப்பட்டதால் தற்போது அழிந்து இந்தோனேசியாவில் மட்டுமே உள்ளன. சுமித்திரன் இனமானது மோரினோ மற்றும் சுமித்ரா நாடுகளில் மட்டுமே உள்ளன. இதுவும் வேட்டையாடுதல் மூலமாக தற்போது 275 எண்ணிக்கையில்தான் உள்ளது. மீதமுள்ள இந்த அரியவகை விலங்கை பாதுகாப்பது நமது கடமை
நிலவளம் ரெங்கராஜன்