சென்னை ஐகோர்ட் & மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

தமிழ்நாடு முழுக்க கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (ஏப்.17) முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐகோர்ட் தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் திங்கட்கிழமை முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது கட்டாயம். மேலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வழக்கு பட்டியலில் இல்லாத நிலையில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் காணொளி காட்சி மற்றும் நேரடி முறையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.