தமிழ்நாட்டில் மினி ஊரடங்குக்கு வாய்ப்பு – ராதாகிருஷ்ணன் தகவல்
![தமிழ்நாட்டில் மினி ஊரடங்குக்கு வாய்ப்பு – ராதாகிருஷ்ணன் தகவல்](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/03/mini-lockdown-mar-25a.jpg)
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ‘தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 972 ஆண்கள், 664 பெண்கள் என மொத்தம் 1,636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 633 பேரும், கோவையில் 174 பேரும், செங்கல்பட்டில் 178 பேரும், திருவள்ளூரில் 72 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளது என்று தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகாது என்றும் மினி ஊரடங்கை அமல்படுத்தவே ஆலோசிப்பதாகவும் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
இந் நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்றில், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.