ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் இளவேனில் வாலறிவன்!

ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலுக்கான போட்டியில் இளவேனில் வாலறிவன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரங்கனையான, தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான, 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா விட்டாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தனி மற்றும் கலப்பு பிரிவில், இளவேனில் வாலறிவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காராமணிகுப்பத்தில் பிறந்தவர் இளவேனில். இவருடைய தாத்தா உருத்திராபதி, தமிழ்ப் பற்றாளர். தன்னுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகள் ஆகியோருக்குத் திருக்குறளில் இடம்பெற்ற பெயர்களை வைப்பதைக் கடமையாகவும் பெருமிதமாகவும் கொண்டுள்ளார். மகனுக்கு வாலறிவன் (தூய்மையான அறிவு வடிவானவன்) என்று பெயர் சூட்டியவர், பேரக் குழந்தைகளுக்கு இறைவன், இளவேனில் என்று பெயர் வைத்துள்ளார்.

இளவேனிலின் தந்தை வாலறிவன், அகமதா பாத்தில் உள்ள தனியார் வேதியியல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கிறார். தாய் சரோஜா, தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். பெற்றோர் இருவரும் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பிள்ளைகளின் விருப்பம் எதுவோ, அதைச் செய்யவே ஊக்குவித்துள்ளனர். மகன் இறைவன் ராணுவத்திலும் மகள் இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனையுமான சிங்கி யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கொரோனா காலம் என்பதால் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:-

10 மீட்டர் ஏர் ரைபிள் (ஆண்கள்):

திவ்யான்ஷ் சிங் பன்வார், தீபக் குமார். பெண்கள் பிரிவு: அபூர்வி சண்டேலா, இளவேனில் வாலறிவன், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (ஆண்கள்): சஞ்ஜீவ் ராஜ்புத், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், பெண்கள்: அஞ்சும் மோட்ஜில், தேஜஸ்வினி சவாந்த், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஆண்கள்): சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, பெண்கள்: மானு பாகெர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால்.

25 மீட்டர் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் (பெண்கள்):

ராஹி சர்னோபத், மானு பாகெர்.

ஸ்கீட் (ஆண்கள்):

அங்கட் விர் சிங் பஜ்வா, மைராஜ் அகமது கான்

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி:

திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக்குமார், அஞ்சும் மோட்ஜில். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி.

Related Posts

error: Content is protected !!