முறைகேடுகளை தடுக்க, ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்களின் உடைகளில் கேமரா !
அண்மையில் ரெயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ரெயிலில் பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த புகாரை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற புகார்களும், பயணிகளிடம், டிக்கெட் உறுதிபடுத்தல், பெர்த் உறுதிப்படுத்தல் போன்றவற்றிக்காக டிக்கெட் பரிசோதகர்கள் பணம் வாங்குவதாகவும், மற்றும் பயணிகளும், டிக்கெட் பரிசோதகர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கவும், புகார்களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளவும், மேலும் தவறுகள் நடக்காமல் இருக்கவும், டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப் படுவதாக ரயில்வே துறை கூறியுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 50 கேமராக்கள் மும்பை ரயில்வே கோட்ட டிக்கெட் பரிசோதகர்களின் உடையில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சியாகும்.இந்த முயற்சியின் வெற்றியை பொறுத்து நாடு முழுவதும் உள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராவின் விலை ரூ.9000 ஆயிரம் எனவும், இதில் 20 மணி நேர காட்சிகளை பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது. இதில் தவறு யார் மீது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதோடு, டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகள் இருவருமே பொறுப்போடு செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


