என்னை சுற்றி பல நெருப்புகளை மூட்டி என்னைச் சுட்டெரிக்க முயற்சிக்கின்றனர்! – சுப. உதயகுமாரன்!

என்னை சுற்றி பல நெருப்புகளை மூட்டி என்னைச் சுட்டெரிக்க முயற்சிக்கின்றனர்! – சுப. உதயகுமாரன்!

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுப.உதயகுமாரன் பணம் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார் என்பது போன்று ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ‘ஸ்டிங் ஆப்ரேஷன்’ என்று உதயகுமார் பேசும் வீடியோவையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள உதயகுமார், அந்த சேனல் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தன் தோழர்களுக்கு இப்பிரச்னைக் குறித்து கடிதம் எழுதியுள்ள சுப். உதயகுமாரன் அக்கடித்ததில், “நன்றி தோழர்களே! நான் உண்மையானவன் ஒழுக்கமானவன், உறுதியானவன் என்பதை முழுமையாக நம்புகிற, எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்கிற எனது மனைவி, பெற்றோர், குழந்தைகள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். எனது பல்வேறு சமூக, அரசியல் செயற்பாடுகளால் இவர்களின் அமைதியான வாழ்க்கையை பல ஆண்டுகளாக நான் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறேன். அது பெரும் குற்ற உணர்வைத் தந்தாலும், இவர்கள் எங்கேயும், எந்த இடத்திலும் எனது நிமித்தம் தலைகுனிந்து நிற்கவேண்டியது வரவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நீண்டகாலமாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், பூவுலகின் நண்பர்கள், பச்சைத் தமிழகம் போன்ற இயக்கங்களின் நண்பர்கள் என்னை நன்கு அறிவார்கள், இரும்பனைய உறுதியோடு இப்போதும் என்னோடு நிற்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றிகள். உலகெங்குமுள்ள எனது ஆருயிர் நண்பர்கள், பல்வேறு இயக்கங்களை, கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் எனக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும், இயங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்து ஆறுதலும், தேறுதலும் சொல்லிச் செல்கி றார்கள். அவர்களுக்கும் எனதன்பும், நன்றிகளும். தமிழக ஊடகத் தோழர்கள் என்னை நன்கு அறிவார்கள். ஒரு விதத்தில் பார்க்கும்போது, இடிந்தகரை, கூடங்குளம், கூத்தன்குழி பகுதி சகோதர சகோதரியரைவிட, பாமர மீனவச் சொந்தங்களைவிட, நெல்லை மாவட்ட ஊடக நண்பர்க ளால்தான் நான் உருவாக்கப்பட்டேன்.

எனக்கு பேசச் சொல்லித்தந்து, நான் பேசியதை இரவு பகல் என்று பாராமல் பதிவுசெய்து, உல கெங்கும் கொண்டு சென்றவர்கள் அவர்கள். என்னை, எனது வாழ்வை, வாழ்க்கை முறையை, என் குடும்பத்தை முழுமையாக அறிந்தவர்கள். நரேந்திர மோடியின் மக்கள் விரோத மத்திய அரசும், பாசிச சங்கப் பரிவாரமும், தமிழர்களை ஏமாற்றி மக்கள் அதிகாரத்தைத் திருட நினைக்கும் நடிகர் கும்பலும், இவர்களின் ஆரியத்துவ ஊடக எடுபிடிகள் சிலரும் சேர்ந்து, திட்டமிட்டு யூன் 20, 2017 அன்று என்மீது சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்கும்போது, நெல்லை ஊடக நண்பர்கள் பலர் கவலையோடு அழைத்து “அண்ணா, உங்களை கைது செய்யப் போவதாகப் பேசிக்கொள்கிறார்கள்” என்று அன்புடன் விசாரித்தார்கள்.

குமரி முதல் சென்னை வரையுள்ள ஊடக நண்பர்கள் எனது உண்மையை, ஒழுக்கத்தை, ஒருமைப்பாட்டை அறிவார்கள்; என்னை அன்புடனும், நட்புடனும் நடத்துகிறார்கள். அதனால்தான் ஆர்யத்துவ ஊடகம் செய்த சதியை தமிழக ஊடகங்கள் அப்படியே குப்பைத்தொட்டியில் தூக்கி   போட்டு விட்டு, “எங்கள் வீட்டுப் பிள்ளையை எங்களுக்குத் தெரியும், நீ என்ன சொல்வது?” என்றுப் புறந்தள்ளினார்கள். தமிழினம், தமிழகம், தமிழர் அரசியல் சரியான பாதையில் போகத் துவங்கி விட்டது என்பதற்கு அருமையானச் சான்று இது.

அணுசக்தித் துறைக்கு, அதன் திட்டங்களுக்கு எதிராக களமாடத் துவங்கும்போதே எப்படியெல்லாம் தொந்திரவு செய்வார்கள், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையெல்லாம் அறிந்திருந்தேன் நான்.  அதனால்தான் தனிமனித ஒழுக்கத்திலும், வரவு-செலவு விடயங்களிலும், வாழ்வின் பிற அம்சங்களிலும் உண்மையாக இருந்தேன், இருக்கிறேன். அப்படித்தான் மத்திய இணை அமைச்சர் ஒருவரின், இந்தியப் பிரதமர் ஒருவரின் பொய்யானக் குற்றச்சாட்டுக்களை ஊதித்தள்ள முடிந்தது. அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிந்தது. இந்தியாவின் உச்சபட்ச உளவு நிறுவனமான ஐ.பி, ஓர் அறிக்கை வெளியிட்டபோது, அதை மறுக்க, எதிர்க்க முடிந்தது.

தமிழரை–தமிழகத்தை அணுத்தீமையிலிருந்து காப்பது, தோழமை இயக்கங்களுடன் மாதம்தோறும் “பாசிசக் கண்காணிப்பு” கூட்டம் சென்னையில் நடத்துவது, திரையுலக பிரபலத்தால் நாடாள விரும்புவதை எதிர்ப்பது, பார்ப்பனீயம் தமிழகத்தை, இந்தியாவை, எல்லாத் தரப்பு மக்களையும் விழுங்கி ஏப்பமிட முயல்வதை (“புதிய விடியல்” இதழில் “உலக அக்ரஹாரம்” எனும் தலைப்பில்) பதிவிடுவது, தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து வளர்ச்சி என்கிற பெயரில் நம் வளங்களை, வாழ்வாதாரங்களை அழிக்கும் முயற்சிகளை எதிர்ப்பது, அரசியல் தளத்தில் தமிழ்க் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை ஒன்றிணைக்க முயல்வது, சிறுபான்மை மக்களை வழிநடத்தும் தலித்—கிறித்தவ-இசுலாமிய இயக்கங்களோடு கைகோர்த்து இயங்குவது – இவை போன்ற காரணங்களால்தான் மத்திய அதிகார வர்க்கம் என்னை செயலிழக்கச் செய்ய முயற்சிக்கிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைந்த நேரத்திலேயே “பா.ஜ.க. அரசு கண்காணிப்பகம்” (BJP Government Watch) ஒன்றைத் துவங்கி பாசிச சங்கப் பரிவாரத்தை எதிர்த்தவன், இன்றும் உறுதிபட பாசிச எதிர்ப்புக் களத்தில் நிற்பவன் என்பதால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பலும், இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும் என்னை மிக மோசமாக நிந்திக்கின்றனர். இந்த “இந்துக் கலாச்சாரக் காவலர்கள்” எழுதும் “கண்ணியம்” மிக்க வாசகங்களை, “அறமும், தர்மமும்” தோய்ந்த அவர்களின் உணர்வுகளை எனது முகநூல் பக்கத்திலுள்ள சில ஆர்யத்துவப் பின்னூட்டங்களிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இவர்கள் இன்னுமொருமுறை ஆட்சிக்கு வந்தால், நாடு என்னவாகும், என்னென்ன நடக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் அறிவோ, ஆற்றலோ, அனுபவமோ எதுவுமின்றி, தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது, அதை ஆக்கிரமிக்க “ஆண்டவன்” பணமும், அனுமதியும் தருகிறார், ஆண்டு அனுபவித்து விடுவோமே என்கிற அடிப்படையில் மட்டும் சிலர் திரையுலக பிரபலம், பிறரின் பணபலம், ரசிகர் படைபலத்தோடு வீட்டுக்குள்ளிருந்தவாறே வீதியில் நின்று போராடுவது போலத் தோற்றமளிக்கும் “நடிப்பு அரசியல்” செய்ய விரும்புகின்றனர். “நரைகூடிக் கிழப் பருவம்” அடைந்துவிட்ட அவர்களின் முன்னாள் ரசிகர்கள் அரசியல் அதிகாரமும் அதன் பலாபலன்களும் தங்கள் வீட்டின் முன்னால் வந்து நிற்கும்போது, வீணாக சத்தம் போட்டு கலைக்க முயல்கிறானே என்று என்மீது கடும் கோபம் கொள்கின்றனர். அவர்களின் விரக்தி, வேதனை கோபக் கனல்களாய், கொடும் வார்த்தைகளாய் வெளிப்படுகின்றன. இவர்களின் நார்சிசிஸ்ட் “தலைவர்” மீதான பக்தி பரவசத்தையும் (!) எனது முகநூல் பின்னூட்டங்களில் காணலாம்.

பாசிஸ்டுகளும், நார்சிசிஸ்டுகளும் கூட்டணி அமைத்து அதிகாரத் திருட்டு நடத்த திட்டமிடுவதைத் தடுப்போம். நேரடியாக எதுவும் செய்ய முடியாத பா.ஜ.க.வும் அதன் சங்கப் பரிவார பாசிச சக்தி களும், தமிழ் மக்கள் அதிகாரத்தைத் திருட நினைக்கும் நடிகர் கும்பலும், மக்கள் விரோத மத்திய அரசும் ஒன்று சேர்ந்து சூழ்ச்சிகள் செய்து என்னைக் கேவலப்படுத்த, சோர்வடையச் செய்ய நினைக்கின்றனர்.

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் 3-4-வது அணு உலைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரீட் போடவிருப்பதால், இந்தக் கோ(ழை)சாமி அதிரடியின் மூலம் என்னை பணவெறியனாக சித்தரிப்பது, என் மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பது, என்னை தனிமைப்படுத்துவது, தமிழ்க் குடிமைச்சமூகத்தை மதவெறி பாசிசக் கொள்கையின் உதவியோடு தேசபக்த இந்துக்கள் – தேசத்துரோக கிறித்தவர்கள் என்று பிரித்தாள்வது, என்னை கிறித்தவர்களின் கையாள் என்று வர்ணிப்பது – இப்படியாக என்னைச் சுற்றி பல நெருப்புகளை மூட்டி என்னைச் சுட்டெரிக்க முயற்சிக்கின்றனர்.

மக்கள் இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தங்களின் அணுஉலை அழிவு  திட்டத்தின் அடுத்தக் கட்டத்தை எந்தவிதமான எதிர்ப்புமின்றி நிறைவேற்றி விட எத்தனிக்கி றார்கள்.  உண்மையில், சுடப்படாத சுண்ணாம்பும், புடம்போடப்படாதத் தங்கமும், வேகவைக்கப்ப டாதச் செங்கல்லும், வேதனைகள் அனுபவிக்காத மனித மனமும் ஒரு பொருட்டாவதேயில்லை. கணவன் இராமனால் சந்தேகிக்கப்பட்ட சீதாப்பிராட்டி தீக்குளித்து ஒளிப்பிழம்பாய் உயர்ந்தோங்கி யதுபோல, அரசால் எரிக்கப்படும் நான் “உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்” எனும் பாரதி கூற்றுக்கிணங்க ஒளி பெற்று நிற்கிறேன். இந்த உள்ளொளியும், வாக்கொளியும் வழிநடத்துவதால் “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே” என்று பாடிக்கொண்டே என் பயணத்தைத் தொடர்கிறேன். நன்றி, வணக்கம்” என்று  சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!