கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு – சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி!
![கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு – சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2022/03/corona-1.jpg)
தமிழ்நாட்டில் சமீபகாலமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வுகளை அளித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, கடந்த ஓராண்டாகவே தடை விதிக்கப்பட்டிருந்த சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு நாளை (மார்ச் 3) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேர்வரை பங்கேற்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர்வரை பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-02-2022 முதல் ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்.40-3/2020/DM-I(A), நாள் 25-02-2022-இல் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல் நீக்கப்படுகிறது. மேலும், தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திட, 3-3-2022 முதல் 31-3-2022 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.
மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.