மாஸ்டர் கொடுத்த தைரியத்தால்தான் இந்த ’சுல்தான்’ படம் தியேட்டர் ரிலீஸ் – எஸ்.ஆர் பிரபு

மாஸ்டர் கொடுத்த தைரியத்தால்தான் இந்த ’சுல்தான்’ படம் தியேட்டர் ரிலீஸ் – எஸ்.ஆர் பிரபு

ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வர இருக்கும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் சிம்பு குரலில் வெளியான ‘யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல’ என்ற பாடலும் ஹிட் அடித்திருக்கிறது. தற்போது சுல்தான் படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் படக்குழு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தது.

அப்போதைய ஸ்பார்ட் ரிப்போர்ட் இதோ:

நடிகர் கார்த்தி பேசியது

இந்த விழா குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் கொடுத்திருக்கிறது. ஒரு வரியிலேயே நான் ஒப்புக் கொண்ட கதை தான் சுல்தான். அதேபோல், நான் தான் நடிக்க வேண்டும் என்று 2 வருடங்கள் பொறுமையாக காத்திருந்து இயக்கியிருக்கிறார் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் வெற்றிபெற்றால் பல மொழிகளிலும் மறுஉருவாக்கம் செய்யப்படும்.

ஒரு படத்திற்கு கதாநாயகன் மிகவும் முக்கியம். அதேபோல், கதாநாயகியும் முக்கியம். அதைவிட வில்லன் மிக மிக முக்கியம். இப்படத்திற்கு வில்லன் சிறப்பாக அமைந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை லால் கட்டப்பா மாதிரி. எந்த காட்சியாக இருந்தாலும், எந்த பாத்திரமாக இருந்தாலும் லால் திறமையாக செய்கிறார்.

யோகிபாபுவின் படங்களைப் பார்த்து ரசித்து சிரித்திருக்கிறேன். ஆனால், அவருடன் இப்படம் மூலம் முதன்முதலாக பணியாற்றும் போது தான் அவர் மிகப் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. அவருக்கு ஒருமுறை போன் பேசும்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றார். அவரிடம் ஒரு விளையாட்டு வீரர் ஒளிந்திருக்கிறார் என்று அப்போது தான் தெரிந்தது. இப்படி பல திறமைகள் அவரிடம் உள்ளது.

நெப்போலியன் ஒரு நண்பராக தான் இப்படத்தின் பணியாற்றினார். ராஷ்மிகா இதுவரை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படத்தில் கிராமத்து பெண்ணாக வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பால் கறப்பது, சேற்றில் வேலை செய்வது, மாட்டுவண்டி ஓட்டுவது என்று அனைத்தையுமே எளிதாக செய்திருக்கிறார். அனைவருக்கும் இவரைப் பிடிக்கும். அதேபோல் அவர் புத்திசாலியும் கூட.

ஷோபி சிறப்பாக நடனம் அமைத்திருந்தார். சிங்கம்புலி, பொன்வண்ணன், மாரிமுத்து இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கும்படியாக பாக்கியராஜ் கண்ணன் கதை அமைந்திருக்கிறார். அனைவரும் பாதுகாப்புடன் இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து மகிழுங்கள்

பாடலாசிரியர் விவேகா பேசியது

இப்படத்தில் நான் 5 பாடல்களை எழுதியிருக்கிறேன். ஒரு பாடலுக்கேற்ற சூழலை சொல்லுவதற்கு கைதேர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். இப்படம் மாபெரும் வெற்றியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அனைத்து பாடல்களையும் ஸ்டுடியோவில் தான் இயற்றினேன். ராஷ்மிகா புகைப்படத்தை கொடுத்து இவர்தான் கதாநாயகி என்றதும், ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல’ என்கிற வரி தான் எழுத வந்தது. பாடல்கள் இணையத்தில் கேட்டுவிட்டு பல பேர் பாடல் வரிகள் குறித்து எனக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கார்த்தி அற்புதமான நடிகர். அனைத்து விதமான பாத்திரங்களும் செய்யக் கூடிய நடிகராக இருந்து வருகிறார். கார்த்திக்கு ‘சிறுத்தை‘ படத்திலிருந்து பாடல்கள் எழுதி கொண்டு வருகிறேன் .

இசையமைப்பாளர் விவேக் (மெர்வின்) பேசியது

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாக்கியராஜ் கண்ணன் எங்களிடம் கதை கூறினார். 2 மணிநேரம் எங்கேயும் நகரவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தோம். ஆனால், இறுதிக் காட்சிகளை அவர் கூறும்போது இருவரும் எழுந்து நின்றுவிட்டோம். இதுதான் சுல்தானின் விளைவு. இப்படம் எங்களுக்கு மிகப் பெரிய தூண்டுதலாக இருந்தது. ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது பாடல்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு இயக்குநர், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். அனிரூத் மற்றும் சிம்புவும் இப்படத்திற்காக பாடி கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியது

கார்த்தி சிறப்பாக நடிப்பார் என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்னும் எனக்கு அறிவுரை தேவைப்படுகிறது. இயக்குநர் எனக்கு இப்பட கதையை முதல் முதலாக அழகாக கூறியதற்கு நன்றி. இப்படத்தில் என்னை அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பின்னணியில் நான் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசை இப்படம் மூலம் நிறைவேறியது.. நான் அனைவரையும் விரும்புகிறேன் ‘ஐ லவ் யூ ஆல்’ .

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேசியது,

எனக்கே மிகவும் படபடப்பாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. கார்த்தி நடித்த முதல் படமான ‘பருத்தி வீரன்‘ படம் பார்த்ததும் தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு நடிகனா என்று ஆச்சரிய பட்டேன். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன். அன்று முதல் அவரது ஒவ்வொரு படத்தையும் ஓடி ஓடி பார்ப்பேன். அப்படி உருவானது தான் சுல்தான். நான் பிரமித்து பார்த்த நடிகர் என்றால் அது கார்த்தி தான். அவரை பல வித பாத்திரங்களில் பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் புது விதமான கார்த்தியை காண்பிக்க விரும்பினேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.

ராஷ்மிகா விளையாட்டு பெண்ணாக இருப்பார். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் கதாபாத்திரத்தில் ஒன்றி விடுவார். காதல் கட்சிகளில் கிட்டதட்ட 100க்கும் மேல் இந்த மாதிரி காட்சிகளை வைக்கலாமா என்று என்னுடன் கலந்து கொண்டார். மிகப்பெரிய முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகும் அவர் இப்படியே இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியது

2 வருடங்களுக்குப் பிறகு இந்த இடத்தில் விழாவை வைத்திருக்கிறோம். கொரோனாவிற்கு பிறகு விழா வைத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தோடு வைத்திருக்கிறோம். இப்படத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகமாக இருந்தது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் இரண்டு படத்திற்கான கதையைக் கூறினார். பாகுபலி அளவிற்கு பிரமாண்ட கதையாக இருந்ததால், இந்த இரண்டு கதைகளையும் பாகுபலி கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம் கூறினோம். அவர் கூறிய ஆலோசனையின்படி இக்கதையை அமைத்தோம். .அது எங்களுக்கு மிகுந்த பலமாக இருந்தது.

காஷ்மரோ படத்தை சவாலாக எடுத்தோம். அதுபோலவே தான் இப்படமும் சவாலாக அமைந்தது. அதன்பிறகு வெளியீட்டு தேதி ஒரு வருடத்திற்கு மூன்று தான். பொங்கல், கோடை விடுமுறை மற்றும் தீபாவளி. ஆனால், அதற்குள் கொரோனா பாதிப்பு எல்லாவற்றையும் புரட்டி போட்டது. அதன்பிறகு திரைத்துறை பாதை மாறிவிடுமோ? என்கிற பயமும், சந்தேகமும் இருந்தது. ஆனால், அதைத்தாண்டி எல்லோருக்கும் இருந்த தன்னம்பிக்கை தான் வெற்றிபெற செய்திருக்கிறது. பணம் வந்து விடும். ஆனால், காலதாமதம் ஆகும் என்று என்மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

கொரோனாவிற்கு பிறகு, இந்திய அளவில் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் தான். திரையரங்கில் வெளியிட்ட அப்படக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நம்பிக்கை தான் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவெடுக்க வைத்தது. இப்படத்தில் வரும் ஒரு காட்சியை நான் மிகவும் ரசித்தேன். அது, எப்படிண்ணே இவ்வளவு பேருக்கும் சாப்பாடு போடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு அதை ஏன் கேட்கிறீர்கள்? என்ற காட்சி எனக்கு பொருத்தமாக இருந்தது. அதைப் பார்த்து நான் ரசித்து சிரித்தேன். அந்தளவிற்கு இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பெரிய கூட்டம் இருக்கும். நெப்போலியன், லால், இருக்கிறார்கள். இவர்கள் தவிர மயில்சாமி, மாரிமுத்து போன்ற இன்னும் பல கலைஞர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடையே நடக்கக் கூடிய உணர்வுபூர்வமான காட்சி அமைப்பு கண்கலங்க வைக்கும் படியாக இருக்கிறது. இதுபோன்ற ஒரு தரமான படத்தைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. டிரீம் வாரியர்ஸ் எப்போதும் தரமான படங்களை கொடுப்பார்கள் என்பதை இப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. எல்லோரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து மகிழுங்கள்.

error: Content is protected !!