ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல் வளர்ந்த கதை!

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல் வளர்ந்த கதை!

புதுக்கோட்டை டிஸ்ட்ரிக் அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ தொலைவில் இருக்கும் 25 வீடுகளே கொண்ட சின்னவீரமங்கலம் என்ற தக்கணூண்டு வயல்வெளியில் ஆரம்பிக்கப்பட்ட ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ எனும் யூ டியூப் சேனலுக்கு இப்போ ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களாம்..இதற்கான ஷீல்டு, டைமன்ட் பட்டன், மற்றும் பரிசுகளை யூடியூப் சேனல் வில்லேஜ் குக்கிங் குழுவினருக்கு அனுப்பியுள்ளது.

நேத்திக்கு இச்சேனல் குழுவினர் முதல்வர் நிவாரணநிதியா 10 லட்சம் அளிச்ச சேதி நம்ம குரூப்பில் வந்த சேதி நினைவிருக்கும்.

இந்த யூடியூப் சேனல் கடந்த 2018 ஏப்ரலில் தான் தொடங்கப்பட்டது. இந்தச் சேனலின் அசைவ உணவு சமையலுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்காய்ங்க. இம்புட்டு சப்ஸ்கிரைப்களை அள்ளிச் சாதனை படைத்திருக்கும் அச்சேனலின் நிறுவனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியத்திடம் நம் கட்டிங் கண்ணையா வாழ்த்துகளை தெரிவிச்சி பேச்சுக் கொடுத்த போது கிடைச்ச சுவையான தகவல்கள் இதோ;

இது நவீனமயாகி விட்ட டிஜிட்டல் உலகம். பிடிக்காத சில பல இருந்தாலும் சகல்ரும் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழலை நோக்கி இந்த தகவல் தொழிநுட்பம் படுவேகமா வளர்ந்துக்கிட்டு இருக்கு. இந்த ஐ.டி புரட்சியை நாமளும் ஆக்கபூர்வமா பயன்படுத்தணும்னு திட்டமிட்டேன். அதுக்காக, எனக்குத் தெரிஞ்ச அட்சயபாத்திரம்தான் யூடியூப் சேனல். இன்னைக்கு ஏராளமான பேர் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சு நடத்துறாங்க. ஆனா, எல்லோரும் ஜெயிக்கிறது இல்லை. அதுலே தனித்துவம் உள்ளவர்களாலும், புதுமையான விஷயங்களை சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும், அழகாகவும் சொல்றவங்களாலே மட்டும்தான் வெற்றிபெற முடியுது. அது புரிஞ்சு ஆறேழு மாசம் எல்லா யூ டியூப் சேனல்களையும் பார்த்தேன். இன்னிக்கும் சமையலுக்காக யூ டியூபிலே எக்கச்சக்க சேனல் இருக்கு. அதுலே நாம தனிச்சு நிக்கணும் அப்படீன்னு யோசிச்சு நம் பாரம்பரிய கிராமத்துச் சமையலை கையில் எடுத்தோம்.

இதை வெறும் நாலு சுவத்துக்குள்ளே உள்ள ஒரு கிச்சனுக்குள்ளே வைச்சு ‘முதலில் அடுப்பில் வாணலி எடுத்து வைக்கவும். அடுத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்’ இப்படி வழக்கமான சமையல் குறிப்பா இல்லாம, ஏதாவது புதுமையா செய்யணும்னு முடிவு பண்ணினோம். அதுக்காகத்தான், நம் மண் மணம் வீசக்கூடிய பசுமையான வயல்வெளிகளைத் தேடிப் போய், சமைச்சுப் படமாக்குறோம்.அதுலே வெறும் சமையல் மட்டுமில்லாம, அந்த ஊரின் அழகான வயல்வெளிகள், விவசாயம், வாய்க்கால், நீரோடை , பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரம், மரம், செடி கொடிகள் என இப்படி பசுமை போர்த்திய இயற்கை சார்ந்த நம் வாழ்க்கையையும் சமையலுடன் சேர்த்தே பதிவுசெஞ்சு பரிமாறிக்கிட்டு வர்றோம்.

வெறும் சமையலை மட்டுமே செஞ்சு காட்டினால் பார்வையாளர்கள் கடுப்பாகிடுவாங்க. அதனால்தான், நாங்க இதன் பின்னணியில் செய்ற எங்களோட ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிக்கும்படியா இருக்கும். பனை ஓலை பட்டையிலே சாப்பிடுறதுகூட பல பேரும் ஏங்குற ஒண்ணு. அதேமாதிரி, கிராமங்களில் உள்ள குளத்துலே மீன் பிடிக்கிறது. அது ஒரு பெரிய பாரம்பரிய முறை. பத்தக்கட்டையினு ஒரு முறை இருக்கு. துவாரம் போட்ட ஒரு குழாய் வழியே தண்ணீரை திறந்துவிட்டு, தண்ணீர் செல்லும் வழியிலே ஏறி வர்ற மீன்களை லாகவமா பிடிக்கிறது. இந்த முறை ரொம்பப் பேருக்குத் தெரியாது. கிராமத்தைவிட்டு நகரங்களுக்குப் போனவங்களுக்கு இது எல்லாம் ஏக்கமும் மகிழ்ச்சியும் தரக்கூடிய விஷயம். இதை அப்படியே ஷூட் பண்ணி மீன் குழம்பு சமையலுடன் பதிவு செஞ்சிருக்கோம்.

அதே மாதிரி, வயல்வெளியில் பொந்துகளுக்குள் பதுங்கி இருக்கும் நாட்டு நண்டுகள் பிடிக்கிறது. நீர்நிலைகளில் ஊர்ந்து செல்லும் நத்தைகளைச் சேகரிச்சு சமைக்கிறது. அப்புறம், தைப் பொங்கலுக்கு நேரடியா வயலுக்கே போய் புது நெல் எடுத்து வந்து அதை உரலில் வைச்சு கைக்குத்தலா குத்தி எடுத்து, மண் பானையிலே பொங்கல் வைக்கிறது, ஈசல் பிடிச்சு அதைப் பொரி அரிசியோட சேர்த்து தயார் பண்றது… மசாலா அயிட்டங்களை மணக்க மணக்க அம்மியிலே அரைக்கிறது… இப்படிப் பல புதுமையான சமையலின் பின்னணி சார்ந்த விஷயங்களையும் சேர்த்தே பதிவு பண்ணிக்கிட்டு வர்றோம். இதனால்தான், நாங்க மக்கள்கிட்டே இவ்வளவு சீக்கிரத்துலே நெருக்கமா ரீச் ஆக முடியுது. தொடர்ச்சியா நல்ல வரவேற்பும் கிடைக்குது.

இந்த டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் 5  பேர் இருக்கோம். இதுலே முக்கியமான நபர் பெரியதம்பி ஐயா. அவருக்கு வயது 67. அருமையான சமையல் கலைஞர். இதுக்கு முன்னாடி ஏராளமான விஷேசங்களுக்கு சமையல் செய்தவர். அவருடைய கை வண்ணத்துலேதான் எங்க சேனலின் சமையல் மணக்குது. இந்தச் சேனல் பணியில் ஈடுபட்ட பிறகு, அவர் வேற எங்கேயும் சமைக்கப் போறதில்லே. அடுத்தவர், முத்துமாணிக்கம்.இவர், சமையல் கலையில் பட்டப்படிப்பு முடிச்சவர். அப்புறம் ஐயனார். இவர்தான் மஞ்சள், மல்லி, மிளகாய், சோம்பு, சீரகம் இப்படி எல்லாத்தையும் அம்மியிலே சந்தனமாய் அரைச்சு எடுக்கிறவர். அப்புறம் முருகேசன். காய்கறி எல்லாம் அருமையாய் வெட்டி எடுக்கிறவர். எங்க டீமிலே உள்ள இன்னொருத்தர், தமிழ்ச்செல்வன். இவரு காரைக்குடியில் உள்ள அழகப்பா யுனிவர்சிட்டியிலே நானோ டெக்னாலாஜியில் எம்.பில் முடிச்சிட்டு, அதுலே யுனிவர்சிட்டியிலே பர்ஸ்ட் ரேங்க் வாங்கி சமீபத்துல கோல்டு மெடலும் வாங்கியிருக்கிறார். இந்த டீமில உள்ள நாங்க எல்லோருமே நெருங்கிய ரத்த சொந்த பந்தங்கள். எல்லா வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்வோம். எல்லாத்தையும் நானே கேமராவில் ஷூட் பண்ணி, எடிட்டிங்கும் செஞ்சிடுவேன். இதுக்கான தொழிநுட்ப ரீதியா நாங்க வேற யார்க்கிட்டேயும் போய் நிக்கிறதில்லே. எந்தத் தொழில் செஞ்சாலும் மத்தவங்களை முழுதுமா சார்ந்து நிக்கக்கூடாது. ஒரு தொழில் ஆரம்பிக்கும் முன்னே அதுபற்றிய விஷயங்களை ஓரளவாவது கத்து வைச்சுக்கணும். அப்போதான் நாம ஜெயிக்க முடியும்.

நாங்க எங்க சமையல் ஷூட்டிங்கிற்காக அறந்தாங்கியைச் சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவு சுற்றளவில் உள்ள அழகான கிராமங்களைத் தேர்வு பண்றோம். அங்கே ஷூட்டிங் நடக்கும்போது, அந்தக் கிராமத்து மக்களை அழைச்சு நாங்க தயார் செய்யும் சாப்பாட்டை போடுறோம். இதுக்காக அந்த ஊர் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எங்க சமையலின் அளவு இருக்கும். அதேமாதிரி, அறந்தாங்கி பக்கம் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கும் நாங்க தயார்செய்யும் சாப்பாட்டைக் கொடுத்து அனுப்புறோம்.

பொதுவா ஆடியன்ஸ் நம்ம சேனலைப் பார்க்கும்போது, அவங்களே ஸ்பாட்டிலிருந்து சமைச்சு சாப்பிடுற ஒருவித உணர்வைக் கொடுக்கணும் என்பதை புரிஞ்சு நடக்கரோம். எங்க டீமிலே உள்ளவங்களை வந்து நிறைய பேர் சமைச்சு தரச் சொல்றாங்க; அதுக்காக எவ்வளவு சம்பளம் வேண்ணாலும் தர்றோம்னு சொல்றாங்க. ஆனா, நாங்க அதைச் செய்றதே இல்லை. அடுத்து, ஷூட்டிங்கிற்காக நன்கொடையோ, ஸ்பான்ஸரோ யார்கிட்டேயும் வாங்குறது இல்லை. ஒருத்தர் சாதிக்கணும்னு முடிவு பண்ணிட்டா எப்படியும் சாதிக்கலாம். நாம கையில் எடுக்கிற விஷயத்தைப் பொறுத்தும், நம்முடைய உழைப்பைப் பொறுத்தும்தான் நம்முடைய வெற்றி அடங்கி இருக்கு.நாங்க செய்ற சமையல் உண்மையிலே ருசியா இருக்குதா? அப்படிங்கிறதை எங்களோட நேயர்களும் தெரிஞ்சக்கணுங்கிறதுக்காக, எங்களோட தீவிர நேயர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரவச்சு, அவங்களையும் ருசிபார்க்க வைக்கிறோம். இப்படி நிறைய நேயர்கள் நேரில் வந்து ரசிச்சு சாப்பிட்டு வாழ்த்திட்டு போயிருக்காங்க. இப்ப ஒரு கோடி நேயர்களின் உற்சாக ஆதரவும் பாராட்டும்தான் எங்களை இன்னும் தீவிரமா உழைக்கத் தூண்டுது” .

error: Content is protected !!