பந்துகளில் எச்சில் தடவ நிரந்தரத் தடை உள்ளிட்ட பல புதிய விதிகள் – ஐசிசி அறிவிப்பு!

கிரிக்கெட் பந்தை பளபளக்க வைக்க வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐசிசி அதற்கு தடை விதித்தது. இப்போது அந்த விதியை ஐசிசி நிரந்தரம் ஆகிறது என்பதுடன் பல புதிய விதிகளையும் ஐசிசி அதிரடியாக அறிவித்துள்ளது.
ஐசிசி தலைமைச் செயலதிகாரிகள் கூட்டத்தில் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி மேற்கொண்ட பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய மாற்றங்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால் இந்த கண்டிஷன்கள்தான் உலகக்கோப்பை டி20 போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும், இப்போது நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரை இது பாதிக்காது.
அதன்படி
பந்து வீசும் போது அதனை வீரர்கள் எச்சில் கொண்டு பாலிஷ் செய்யும் பழக்கம், கொரோனா காலத்தில் இருந்து தடை செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், இந்த தடையை நிரந்தரமாகவும் மாற்றி உள்ளது ஐசிசி. இனிமேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எந்த வீரரும் தங்களின் எச்சில் கொண்டு பந்தை பாலிஷ் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ரன்னர் பந்து வீசும் முன்பே சிலபல அடிகள் கிரீசை தாண்டி முன்னேறினால் அவரை அவுட் செய்வது வெகுஜன மக்கள் புரிதலில் மன்கடிங் என்று இருந்தது. ஐசிசி விதிமுறையில் நியாயமற்ற விளையாட்டுப் பிரிவில் இருந்தது இப்போது ரன் அவுட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி மன்கடிங் அல்ல அதுவும் ரன் அவுட்டே.
அதே போல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறை இப்போது சர்வதேச போட்டிகளிலும் அறிமுகமாகிறது, அதாவது ஒரு பேட்ஸ்மென் அடித்த ஷாட் கேட்சாக செல்கிறது, அப்போது ரன்னர் முனையில் இருக்கும் பேட்டர் பேட்டிங் முனைக்கு கிராஸ் செய்வது இனி செல்லாது. பேட்டர் கேட்ச் ஆகி அவுட் ஆகும் போது ரன்னர் கிராஸ் செய்ய முடியாது என்பதால் புதிய பேட்டர்தான் பேட்டிங் முனையில் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும்.
அதே போல் புதிதாக இறங்கும் பேட்டர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2 நிமிடங்களுக்குள் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும், டி20-யில் எப்போதும் உள்ள விதிமுறையான 90 விநாடிகளுக்குள் பேட்டர் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்பது நீடிக்கிறது. இன்னொரு முக்கியமான விதிமுறை என்னவெனில் பவுலர் பந்து வீசும் போது ரன்னர் (Non-Striker) பேட்டின் ஒரு பகுதியாவது கிரீசுக்குள் இருப்பது அவசியம் அப்படி இல்லையெனில் அது டெட் பால் என்று அறிவிக்கப்படும். அதே போல் பேட்டர் ஒருவர் பிட்சை விட்டு வெளியே போக நேரிடும் போதும் அந்தப் பந்து நோ-பால் என்று அறிவிக்கப்படும்.
அதே போல் களவியூகம் அமைத்து விட்டால் பவுலர் ஓடி வரும் போது அதை ரகசியமாக மாற்றுவதோ, செய்வதோ கூடாது, பவுலர் ஓடி வரும்போது அப்படி ஏதாவது மாற்றங்கள் களத்தில் செய்யப்பட்டால் பேட்டிங் அணிக்கு சாதகமாக 5 ரன்கள் வழங்கப்படும். சில வேளைகளில் பவர் ப்ளே உள்ளிட்ட தருணங்களில் 5 பீல்டர் 30 அடி சர்க்கிளுக்குள் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் வேண்டுமென்றே சர்க்கிளின் எட்ஜில் நின்று கொண்டிருந்து விட்டு பவுலர் ஓடி வரும்போது பின்னால் செல்லலாம், இவை நியாயமற்ற மாற்றம் என்ற பிரிவில் வருகிறது. இனி பவுலர் ஓடி வரும்போது களத்தில் மாற்றம் செய்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். இதோடு அந்தப் பந்தும் டெட் பால் என்று அறிவிக்கப்படும்.
அதே போல் பேட்டர் ரன் எடுப்பதற்காக மேலே சில அடிகள் வரும்போது அவரை ரன் அவுட் செய்வதற்காக பவுலர்கள் அவரை நோக்கி த்ரோ செய்வது வழக்கம், இனி அப்படி செய்தால் அந்தப் பந்து டெட் பால் என்று அறிவிக்கப்படும், மீண்டும் அந்தப் பந்தை வீசித்தான் ஆகவேண்டும். அதே போல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை முடிக்காவிட்டால் அந்த காலவரை முடிந்த பிறகு தொடங்கும் ஓவர் முதல் பீல்டிங் டீம் 5 பீல்டர்களை சர்க்கிளுக்குள் நிறுத்த வேண்டும் என்ற விதிமுறை ஒருநாள் போட்டிகளிலும் இனி கடைப்பிடிக்கப்படும், ஆனால் இது 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சூப்பர் லீக் தொடர்கள் நிறைவடைந்த பிறகு அமலுக்கு வருகிறது.