பான் இந்தியா கவனத்தை ஈர்க்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா!
கன்னடத் திரையுலகில் அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் சதீஷ் நினாசம். இவர் நடிப்பில், பீரியட் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ (Rise of Ashoka) திரைப்படம் விரைவில் ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தன் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தும் போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. இதற்கான விளம்பரத் தொடக்க நிகழ்வு சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.

கதைக்களமும் படக்குழுவும்:
டைரக்டர் வினோத் வி. தோண்ட்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ‘காந்தாரா’ புகழ் சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர். 80 மற்றும் 90-களில் நடக்கும் கதையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. லவித் ஒளிப்பதிவு செய்ய, பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். விருத்தி கிரியேசன் மற்றும் சதீஷ் பிக்சர் ஹவுஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
உரிமைக்கான குரல்!
நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் வர்தன் ஹரி, இது முழுக்க முழுக்க கன்டென்ட் சார்ந்த படம் என்றும், ஒட்டுமொத்தக் குழுவின் அர்ப்பணிப்பு இதில் உள்ளதாகவும் தெரிவித்தார். இணைத் தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், “தன் உரிமைக்காகப் போராடும் ஒரு இளைஞனின் வெற்றிதான் இந்தப் படத்தின் கருப்பொருள்” என்றார்.

லட்சியம் கொண்ட அம்பிகா – சப்தமி கௌடா:
நடிகை சப்தமி கௌடா பேசுகையில், “நான் இதில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 80-களில் வாழும் ஒரு பெண், அவளுக்கென்று இருக்கும் கனவுகளுக்காகவும் லட்சியத்திற்காகவும் எப்படிப் போராடுகிறாள் என்பதே உச்சகட்டக் காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழக ரசிகர்கள் என் மீதும், என் படக்குழு மீதும் அன்பு செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழ் ரசிகர்களுக்கு சதீஷ் நினாசம் விடுத்த வேண்டுகோள்:
நாயகன் சதீஷ் நினாசம் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அவர் பேசுகையில்: “நான் கன்னடத்தில் நாயகனாக இருந்தாலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைக்கிறேன். உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளேன்.
இந்தப் படம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாகக் கொண்டது. அந்த மண்ணின் நிறம், மனிதர்களின் நிறம், என் நிறம் என அனைத்தும் தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். அங்குள்ள மக்களின் பேச்சுவழக்கில் தமிழ் கலந்திருக்கும். உணர்வுகள் ஒன்றுதான் என்பதால், இந்த ‘அசோகா’ உங்கள் வீட்டுப் படமாக இருக்கும். கர்நாடகாவில் தமிழ் படங்களுக்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு, அதேபோல் இந்தப் படத்தைத் தமிழக மக்களும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.


