புறநகர் இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சாதிச் சர்ச்சை!

புறநகர் இசை வெளியீட்டு விழாவில் கிளம்பிய சாதிச் சர்ச்சை!

வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின் ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ” புறநகர்”. கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் அனல் அண்ணாமலை வில்லனாக அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், சண்டை, இயக்கம் – மின்னல் முருகன்

இவர் இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் “ எல்லாளன் “ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் மின்னல் முருகன் கூறியதாவது…

சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி ‘‘ ஜாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் புகலிடம் தேடி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழ விடாமல் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லும் படம்தான் ‘புறநகர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையைச் சுற்றிய புறநகரில் படமாக்கினோம். ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தாலும் சண்டைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைவரும் ரசிக்கும்படியான படமாக எடுத்துள்ளேன்’’ இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் இயக்குனர் மின்னல் முருகன்.

முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் கே.பாக்கியராஜ் பேசியதாவது,

“தயாரிப்பாளரும் ஹீரோவுமான கமல் கோவின்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். ரொம்ப பிரமாதமா டான்ஸ் ஆடினார். நமக்கு எப்போதுமே டான்ஸ் வராது. ஸ்டண்ட் மாஸ்டர் படம் இயக்குவது ரொம்ப அரிது. ஆனால் மின்னல் முருகன் படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள் அடிக்கிற சீனில் கலக்கி விடுவார்கள். ஆனால் டயலாக் பேசணும் என்றால் கலங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் மின்னல் முருகன் கதை எழுதி படமே இயக்கி இருக்கிறார் அவருக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.

நான் சாதியைச் சொல்லி அப்பவே படம் எடுத்துள்ளேன். டீக்கடையில் ஒருகாலத்தில் தனிக்ளாஸ் வைத்து டீ குடுத்தார்கள். எனக்கு கஷ்டமாக இருந்தது. வெள்ளாங்கோவில் என்ற ஊரில் அப்படி கொடுமை இருந்தது. ஒரு கை ஓசை என்ற படத்தில் இந்த விசயத்தை அதே ஊரில் சென்று எடுத்தேன். அப்போது எல்லாம் இந்தளவுக்கு சாதிப் பிரச்சனை இல்லை. இப்போது சினிமா உள்பட பல இடங்களில் அதிகமாகி விட்டது.

இந்தப்படத்தை பொறுத்தவரை சண்டைகள் ரொம்ப நல்லாருக்கும். டான்ஸுக்கு நல்ல இம்பார்ட்டெண்ட் கொடுத்து இந்திரஜித் இசை அமைத்துள்ளார். இந்தக்காலத்தில் படம் எடுக்கிறதும் அதைச் சரியா கொண்டு வருவதும் பெரிய விசயம். இந்த டீம் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல உதவியாக இருக்கிறார்கள். மக்களுக்கு கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கிற பொறுப்பு ஹீரோக்களுக்கும் உண்டு. ஏன் என்றால் மக்களிடம் இவ்வளவு பணம் டிக்கெட்டுக்கு வாங்கக் கூடாது என்று ஹீரோக்கள் சொல்ல வேண்டும். படம் டீம் எல்லாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ” என்றார்

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது..

“இந்தபடத்தை தயாரித்து நடித்த தம்பி கமல் கோவின் ராஜ், கோ வின் ராஜ். போ ஜெயிச்சுட்டு வா ராஜா என்பது போல இருக்கிறது. இவர் முதல்படம் போல இல்லாமல் கலக்கி இருக்கிறார். தம்பி மின்னல் முருகன் ஸ்டண்ட் மாஸ்டர் அவர் பிரபுதேவா, லாரன்ஸ் போல வித்தியாசமான இயக்குநராக கவனிக்கப்படுவார். புது முகங்கள் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சரியான இசை மற்றும் ஒளிப்பதிவு கொடுத்துள்ளார்கள். இன்னும் எவ்வளவு வருசம் தாம்யா சாதியைப் பற்றி பேசுவார்கள். பெரியார் நாயுடு தான். என்னைக்காவது தன் சாதியைச் சொல்லி இருக்கிறார். பள்ளிக்கூடத்தில் முதலில் மதம் கேட்கிறார்கள். அப்புறம் நேஷ்னால்டியை கேட்கிறார்கள். அடுத்து சாதியை கேட்கிறார்கள். அதில் இல்லாவிட்டாலே சாதி ஒழிந்து விடும். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. காரணம் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இருக்கிறது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை. மக்களை நேசிக்கும் இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மக்கள் சேவைக்காகத் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஹீரோக்களுக்கு எப்படியெல்லாம் பில்டப் கொடுத்து நாங்கள் உழைத்திருப்போம். அவர்கள் எங்களுக்கு எதாவது திருப்பி தருவார்கள் என்று தானே. ஆனால் இங்கு நன்றியை எதிர்பார்க்க முடியாது. சினிமாவிற்காக வேணும் ஏதேனும் நன்மை செய்யுங்கள். பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்த எனக்கு இன்னும் படம் கிடைக்கவில்லை. இதெல்லாம் மாறணும்.

தனது இயக்குநர்களை மரியாதை கொடுத்த கலாச்சாரம் ஒன்றுண்டு. எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும் போது கூட தனது இயக்குநர்களை மதித்தார். எம்.ஜி. ஆர் நடிக்கும் போது சம்பாதித்தது மட்டும் தான். அரசியலுக்கு வந்த பிறகு அவர் எதுவுமே சம்பாதிக்கவில்லை. அவருக்கு வெளியில் நடிக்கத் தெரியாது. வெளி மாநிலத்தில் செட் போட்டு படம் எடுப்பதை விட நம்மூரில் செட் போட்டு எடுக்கலாமே..நமது ஜுனியர் ஆர்ட்டிஸுக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதைச் செய்ய மாட்டேன்கிறார்கள்.
புறநகர் படம் பெரிய நடிகர் படம் போலவே இருக்கிறது. இந்தப்படம் பெரிய வெற்றிபெறும்” என்றார்.

ஒளிப்பதிவு – விஜய் திருமூலம்

இசை – E.L.இந்திரஜித்

பாடல்கள் – ரா.தேவன், செல்லமுத்து, கானா லாலா

எடிட்டிங் – ஜெய்மோகன்

நடனம் – ரவிதேவ், சரண்பாஸ்கர், மெட்டிஒலி சாந்தி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – கமல்கோவின்ராஜ்

error: Content is protected !!