லோக்கல் லேங்குவேஜ் ப்ளீஸ் – ஜட்ஜூகள் மீட்டில் பிரதமர் மோடி!
எல்லா கோர்ட்டுகளிலும் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 ஐகோர்ட் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் பிறகு நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல். சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில முதல் மந்திரிகள், அனைத்து ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு கூட்டு கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்ற இந்த தேசிய கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோல சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கின்றன. இவை இரண்டும் இணைந்து மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல நீதித்துறையும் காலத்திற்கேற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த நீதிபதிகள் ஊக்கப்படுத்த வேண்டும் இது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் அவர்களுக்கு நீதிமன்றத்துடனான உறவை நன்கு பலப்படுத்தும்” என்றார்.