பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷ்ரப் மரண தண்டனை ரத்து!
உடல் நலம் மோசமாகி மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையிலும் தேசத்துரோக வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் ஐகோர்ட் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்துவிட்டது.
பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999ம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008ம் ஆண்டு வரை அதிபராக ஆட்சி புரிந்தவர் பர்வேஸ் முஷ்ரப் (வயது 76). இவர் தனது ஆட்சியின்போது 2007ம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளை சிறையில் அடைத்தார். 100க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பர்வேஸ் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பர்வேஸ் முஷ்ரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் முஷ்ரப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக மரண தண்டனை விதித்தது.
ஆனால் இந்தத் தண்டனை ஒரு அதிர்ச்சியாகவே அங்கு பார்க்கப்பட்டது, காரணம் ராணுவத் தலைமை ஒருவர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதனாலே அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் முஷ்ரப் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
லாகூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனைத் தீர்ப்பை சட்ட விரோதம் என்று அறிவித்ததோடு, “புகார் பதிவு செய்தது, நீதிமன்ற அமர்வை உருவாக்கியது, அரசு வழக்கறிஞர்கள் தேர்வு அனைத்தும் சட்ட விரோதம் ஆகவே அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகாது’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை அடுத்துஇனி முஷாரப் மீது புதிய வழக்கைத்தான் தொடுக்க முடியும். அதுவும் அமைச்சரவை அனுமதி பெற்ற பிறகுதான் வழக்கு தொடர முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.