சபரிமலை வரும் பெண் பக்தர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டை கட்டாயம்!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள், தங்களின் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலை திருவிதாங்வர் தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வயதில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் என்பதால், அந்த வயது உடைய பெண்கள் கோயிலில் நுழைய திருவிதாங்கூர் தேவஸ்தானம் தடை செய்துள்ளது.
இருப்பினும் தடையை மீறி பெண்கள் மலையேறும் முயற்சிகள் தொடர்கின்றன. மேலும் ஐம்பது வயதை தாண்டிய பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம். இருப்பினும் அப்படி வரும் பெண் பக்தர்கள் தங்கள் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள், கோயிலுக்கு வர முயற்சிப்பதால் இந்த உத்தரவு. ஆதார் அட்டை உட்பட எந்த ஆதாரம் வேண்டுமானாலும் பெண்கள் தங்களுடன் வைத்திருக்கலாம். அப்படி இருந்தால், போலீசுடன் வாக்குவாதத்தை தவிர்க்கலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சமீபத்தில் கோயிலுக்குள்நுழைய முயற்சித்தார். தடை செய்யப்பட்ட வயது உடையவள் அல்ல என் மகள் என்று தந்தை விவாதித்த போதிலும், அவளது வயது சந்தேகம் வந்ததால் அவளை போலீசார் அனுமதிக்கவில்லை. கடைசியில் அடையாள அட்டை காட்டப்பட்டது. அதில் அவளது வயது 11 என்பது தெரிய வந்தது. கோயிலுக்குள் வருவதற்கு என்று கடைப்பிடிக்கப்படும் புனிதமான வழிபாட்டுமுறைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. இந்த ஆண்டு சபரிமலை புனித பயணம் துவங்கிய நாளில் இருந்து இது வரை , கோயிலுக்கு வந்த 260 பெண்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகத்தில்இருந்து வந்தவர்கள். கேரளாவில் இருந்து சில பெண்களே வந்தனர். கோயிலின் நடைமுறை தெரியாமல் வந்ததாகவே கூறினார்கள். இருப்பினும் நடைமுறைகளை மீறி யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.