June 4, 2023

அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம்: இதுதான் காரணம்?!

டுத்தடுத்து ஏதேதோ சர்ச்சைகளில் சிக்கி அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். அரசு பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டுமே நிற்க வேண்டும் என சர்ச்சையான அறிக்கையை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார், அதன்பின்னர் எழுந்த எதிர்ப்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மேலும் பதவி உயர்வு வாங்கி தருவதாக சிலரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னதாக திருமாவுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்றும் சேதி பரவியது நினைவிருக்கலாம். இப்படி தொடர்ந்து இவர் மீது எழுந்து வந்த புகாரால் தற்போது இவர் வகித்து வந்த இலாக்கா மாற்றப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், இதற்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்க இருந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், போக்குவரத்துக்கழக அமைச்சருமான எஸ்.ராஜ கண்ணப்பன் தன்னை சாதியைச் சொல்லித் திட்டியதாக பகிரங்கமாக புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலையிலேயே, ராஜ கண்ணப்பனிடம் இருந்து போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டுள்ளது. “வெறுமனே வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார் மட்டும்தான் காரணம் என்றால், அவரது அமைச்சர் பதவியே பறிக்கப்பட்டிருக்கும். ஆனால், போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டதற்கு காரணம், அந்தத் துறையில் அவர் செய்த தவறுகள்தான் காரணம்” என்கிறார்கள் திமுகவினர்.

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின்போது, அந்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவளித்தாலும்கூட அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், அரசுப் பேருந்துகள் வழக்கம்போல ஓடும் என்றும் திமுக அரசு கூறியிருந்தது. அதையே போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் கூறியிருந்தார். ஆனால், நேற்று (28-ம் தேதி) தமிழகத்தில் 15 சதவீத பேருந்துகள்கூட ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். இது திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கழகத்தில் டெண்டர், பணி நியமனம் தொடர்பான சில புகார்களும் வந்ததாகத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு மிகமிக மோசமாக இருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்துடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்துவந்தார் ராஜ கண்ணப்பன். அண்டை மாவட்ட அமைச்சரும், அதே யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவருமான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமும் இவருக்கு நல்ல உறவு இல்லை. கட்சியினருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் தனி கோஷ்டியாக அவர் செயல்பட்டுவந்ததும், தன்னை ஒரு திமுககாரராகவே கருதாமல் தனி ஆவர்த்தனம் செய்ததுமே அவரது துறை பறிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியில் இன்றுதான் தமிழக அரசு முதல்முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளது.