கேரள கவர்னர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா; வீடியோ!

கேரள கவர்னர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா; வீடியோ!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நம்ம தமிழ்நாடு கவர்னர் பாணியில் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், கவர்னர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.

இந் நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் நிலமெல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் முகமது கானுக்கு கருப்புக்கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை போராட்டம் நடத்தி வந்தனர். அதைக் கண்டதும் காரை நிறுத்த சொல்லி இறங்கிய கவர்னர், சாலையோரம் போராட்டம் நடத்திய மாணவர் கூட்டமைப்பினரை நோக்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், Go Back என முழக்கமிட்டனர்.

இதை அடுத்து அங்கிருந்த தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திய கவர்னர் தான் அங்கிருந்து திரும்பப்போவதில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார். போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை திரும்பப்போவதில்லை என்று கூறிய அவர், போராட்டக்காரர்களை போலீசார் பாதுகாப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.இதை அடுத்து செய்வது அறியாது தவித்த போலீசார், அவரை சமாதானப்படுத்த முயன்றனர். 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதனை ஏற்காத கவர்னர், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அது சரி இந்த மாணவர்கள் போராட்டம் ஏன்? என்கிறீர்களா?

கவர்னருக்கு எதிரான எஸ்எஃப்ஐ அமைப்பினரின் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. மாநில அரசு பரிந்துரைக்கும் நபர்களை விடுத்து, தன்னிச்சையாக பாஜக ஆதரவாளர்களை பல்கலைக்கழக துணைவேந்தர்களாக கவர்னர் நியமித்து வருவதாக எஸ்எஃப்ஐ அமைப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது.

error: Content is protected !!